இலங்கை அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தையும் தொடர்ச்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேரவை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு,
அரசியலமைப்பிற்கான உத்தேச 22 ஆவது திருத்தமானது, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்க முயல்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது,
அத்துடன் ஏனைய நீதிமன்றங்களுக்கும் இதற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அனுபவம் வாய்ந்த நீதிபதிகளைத் தக்க வைத்துக்கொள்வது, கணிசமான அளவில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைத் தீர்ப்பது மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளில் தொடர்ச்சியை உறுதி செய்வது ஆகியவையே அரசாங்கத்தின் முக்கிய நியாயப்படுத்தல்களாகும்.
நீதிமன்றங்கள் முக்கிய குற்றவியல் மற்றும் ஊழல் வழக்குகளையும், கணிசமான வழக்குத் தேக்கத்தையும் கையாளும் இக்காலகட்டத்தில், மூத்த நீதிபதிகளின் அனுபவமும் திறன்களும் முக்கியமான நிறுவன ரீதியான சொத்துக்களாகும்.
தொடர்ச்சியானது நீதித்துறையின் செயல்திறனையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தக்கூடும்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து மக்களின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது, அந்நாட்களிலேயே நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதும் நிர்ணயிக்கப்பட்டது. 1978 இல் 67 ஆண்டுகளாக இருந்த இலங்கையரின் சராசரி ஆயுட்காலம் தற்போது சுமார் 78 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது, இது 11 ஆண்டுகள் அதிகரிப்பாகும்.
இந்த மக்கள்தொகை மாற்றங்களின் வெளிச்சத்தில், கல்வித்துறை மற்றும் பொதுச்சேவை உள்ளிட்ட பிற துறைகளின் ஓய்வு பெறும் வயதும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
இப்பின்னணியில், தேசிய சமாதான பேரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டு, பொதுவான ஓய்வுபெறும் வயதாக 67 இருக்க வேண்டும் என்று முன்மொழிகிறது. பிரதம நீதியரசரின் பதவிக் காலத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள ஆறு ஆண்டு வரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
ஏனெனில், 61 வயதிற்கு முன்னர் நியமிக்கப்படும் ஒரு பிரதம நீதியரசர், ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தக்கூடிய 67 என்ற ஓய்வுபெறும் வயதை அடைவதற்கு முன்பே உயர் நீதிமன்றத்திலிருந்து முற்றிலுமாக விலக வேண்டிய நிலை ஏற்படும், இது நீதித்துறை அனுபவத்தை இழப்பதற்கு வழிவகுக்கும்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மற்றும் நடுநிலையான விதிகளின் மீது தங்கியுள்ளதே தவிர, பொதுவாகப் பொருந்தக் கூடிய பதவிக் கால நீடிப்பினால் நீதிபதிகள் செல்வாக்கிற்கு உட்படுவார்கள் என்ற அனுமானத்தின் மீது அல்ல. பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்றங்களின் ஏனைய நீதிபதிகளின் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதியைக் கட்டாயமாக்குவதன் மூலம் 21 ஆவது திருத்தம் ஏற்கனவே ஒரு முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது.
அரசியலமைப்பு பேரவை என்பது அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பல்கட்சி அமைப்பாகும்.
எனவே சீரான முறையில் பயன்படுத்தப்பட்டால், 22 ஆவது திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் தொடர்ச்சியையும் வலுப்படுத்தி, மதிப்பமிக்க நீதித்துறை அனுபவத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களைத் தொடர்ந்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதை தேசிய சமாதான பேரவை வரவேற்கிறது.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறை சுதந்திரம் மற்றும் தொடர்ச்சி ஆகிய இரண்டையும் வலுப்படுத்துவதை உறுதிசெய்ய கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM