(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
காதி நீதிபதிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு அவர்கள் வகிக்கும் நீதித்துறைப் பொறுப்பின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் கவலைக்குரியதாகும். இது நீதித்துறையின் சுயாதீனம், சேவையின் தரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் காதி நீதிபதிகளுக்கான கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் கட்சியின் தலைவர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நிலையியற் கட்டளை 27 2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கணவன்–மனைவி பிணக்குகள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் சாதாரண நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், நீதியை நாடும் தரப்பினர் சட்டத்தரணிகளுக்குப் பெருமளவு செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.
1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள காதி நீதிமன்ற முறைமை, முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் குடும்பத் தகராறுகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் தீர்ப்பதற்கான முக்கிய நீதிப் பொறிமுறையாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குச் சுமையைக் குறைப்பதுடன், நீதியை நாடுவோரின் சட்டச் செலவுகளையும் கணிசமாகக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
காதி நீதிபதிகள் பொதுவாக உயர்ந்த பொதுச் சேவை மனப்பான்மையுடன் தமது நீதிப் பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்ற போதிலும், தற்போதைய நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவு முறைமையின் போதாமை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன.
மாவட்ட நீதிபதிகள் மாதாந்தம் சுமார் 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை சம்பளமும் கொடுப்பனவுகளும் பெறுகின்ற நிலையில், காதி நீதிபதிகளுக்கு மாதாந்தம் 7,500 ரூபா மட்டுமே கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
அவர்கள் வகிக்கும் நீதித்துறைப் பொறுப்பின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் போதாமையானதாகக் கருதப்படுவதுடன், நீதித்துறையின் சுயாதீனம், சேவையின் தரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இலங்கையில் சுமார் 23 இலட்சம் முஸ்லிம்களுக்கு நீதிச் சேவையினை வழங்கிவரும் காதி நீதிமன்ற முறைமையை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்திற்கொண்டு, பின்வரும் கேள்விகளுக்கு முறையான பதிலை நீதி அமைச்சரிடம் எதிர்பார்க்கிறேன்.
தற்போது இலங்கையில் இயங்கி வரும் காதி நீதிமன்றங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? அவற்றில் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நாடளாவிய ரீதியில் தற்போது கடமையாற்றும் காதி நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அதேவேளை, நிரப்பப்படாமல் உள்ள காதி நீதிபதி வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? காதி நீதிபதிகளுக்கு தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள், வசதிகள் மற்றும் ஏனைய சலுகைகள் யாவை?
காதி நீதிபதிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள், வசதிகள் மற்றும் நிர்வாக ஆதரவு ஆகியவை சுயாதீனமான, திறமையான, உயர்தரமான மற்றும் ஊழலற்ற நீதிச் சேவையை வழங்குவதற்கு போதுமானவை என அரசாங்கம் கருதுகின்றதா? காதி நீதிமன்றங்களின் அலுவலக நிர்வாகம், பதிவேடுகள் பராமரிப்பு, வழக்கு முகாமைத்துவம் மற்றும் நிறுவன ரீதியான ஆதரவை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக மற்றும் உதவி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மேலும், காதி நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் யாவை?
காதி நீதிமன்ற முறைமையை வலுப்படுத்தவும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்தவும், காதி நீதிபதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகளை அதிகரிக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை? காதி நீதிமன்றங்களை மாவட்ட நீதிமன்ற வளாகங்களுக்குள் அல்லது அவற்றுடன் இணைந்த அரச கட்டிடங்களில் நிறுவுவதன் மூலம் காதி நீதிமன்றங்களின் செயல்திறன், பாதுகாப்பு, அணுகல் வசதி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனில், அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM