மத்தள விமான நிலையத்தை அரசாங்கம் இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அம்பாந்தோட்டை மத்தளயில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஒன்பது மணிக்கு நடைபெறவுள்ளது.
அவ் ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்று உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் உட்பட பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்படுவதற்கு எதிராக தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்,
அரசாங்கம் தொடர்ச்சியாக நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அதன் வரிசையில் மத்தள விமான நிலையத்தையும் இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாளை (இன்று) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
மத்தள விமான நிலையம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிலையான அபிவிருத்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் மேற்கொண்டிருந்தார். எனினும் கடந்த அரசாங்கத்தின் மீதுள்ள கோபம் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அவ்விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகிலுள்ள மிகவும் பெரிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகொண்ட விமான நிலையங்கள் தென்னாசியாவில் இரண்டு அல்லது மூன்றே உள்ளன. அவற்றில் மத்தள விமான நிலையமும் ஒன்றாகும். மேலும் மத்தள விமான நிலையம் 4942 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
அத்துடன் விமான ஓடுபாதை 3500 மீற்றர் தூரத்தையும் 75 மீற்றர் அகலத்தையும் கொண்டது. எனவே குறித்த விமான நிலையம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காகவே மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் 205 மில்லியன் அமெரிக்க டொலருக்கே குறித்த விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறியமுடிகிறது. எனினும் விமான நிலையத்தை அமைப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் 209 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது.
எனினும் தற்போது விமான நிலையம், அதற்கான காணி, தொழில் அபிவிருத்தி வலயத்திற்கு உட்பட்ட காணிகள் உள்ளடங்கலாக பெரும்பரப்புக்கொண்ட காணியினையும் 205 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பில் அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்தே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே அவ் ஆர்ப்பட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக் ஷ, டி.வி.சானக உள்ளிட்டோர் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தலை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM