தமது அரசியல் தீர்வுப் பயணத்தில் பெரும் இழப்புக்களை சந்தித்து வந்துள்ள தமிழ் மக்கள் இன்று ஏக்கிய மற்றும் ஒருமித்த நாடு என்ற முறையின் கீழ் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளமை பாரிய திருப்புமுனையாகும். எனவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாவிடின் இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வைக் காணமுடியாது. தமிழ் மக்கள் இதனைவிட கீழே இறங்கி வருவார்கள் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
எனினும் இந்த ஏக்கிய மற்றும் ஒருமித்த என்ற விடயங்களை வைத்துக்கொண்டு தெற்கில் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்த உள்ளிட்டவர்களும் வடக்கில் விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் இனவாத ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் இனவாத செயற்பாட்டை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தற்போதைய இந்த தீர்க்கமான இந்த சூழலில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இதனை குழப்பிவிடாமல் ஒரு நிரந்தர தீர்வைக் காண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மற்றும் ஏக்கிய, ஒருமித்த விவகாரங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:-
சிங்களத்தில் ஏக்கிய என்ற சொற்பிரயோகத்தையும், தமிழில் ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகத்தையும் பயன்படுத்துவதற்கு இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான தவறும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் பிரதிநிதிகள் சிலர் இந்த ஒருமித்த என்பது தொடர்பில் வித்தியாசமான வியாக்கியானங்களை கூட முற்படுகின்றனர்.
ஆனால் எனக்குத் தெரிந்தவகையில் ஒருமித்த என்பது சிங்கள மொழியில் ஏக்கிய என்பதற்கான சரியான தமிழ் சொல் என நம்புகின்றேன். ஒரு என்று வரும்போது அங்கு ஒரு நாடு என்ற பொருள் கிடைக்கிறது. எனவே சிங்களத்தில் ஏக்கிய என்பதற்கு தமிழில் ஒருமித்தநாடு என்ற சொற்பிரயோகத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமன்றி இலங்கையின் சட்டத்தில் ஒரு முக்கிய விடயம் இருக்கின்றது. அதாவது ஏதாவது ஒரு பிரச்சினை வரும்போது அல்லது சிக்கல்கள் வரும்போது சிங்கள மொழில் இருக்கின்ற சொற்பிரயோகமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே இங்கு ஏக்கிய என்ற வசனம் சிங்கள மொழியில் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் 1995 ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ஏக்கிய என்ற வசனத்தை எடுத்துவிட்டு ஐக்கிய என்ற சொற்பதத்தை வைத்து தீர்வுத்திட்டங்களை முன்வைத்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று இடைக்கால அறிக்கையை எதிர்த்து பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியவிடயமாக அமைந்திருக்கின்றது. இன்று தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு முக்கியமான ஒரு இடத்திற்கு இறங்கி வந்திருக்கிறது.
அதாவது சிங்களத்தில் ஏக்கிய என்ற வசனத்தையும் தமிழில் ஒருமித்த நாடு என்ற வசனத்தையும் ஏற்று ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வந்துள்ளமை ஒருமிகப்பெரிய திருப்புமுணையாகும். தமது அரசியல் தீர்வுப்பயணத்தில் கடும் வடுக்களையும் இழப்புக்களையும் சந்தித்த வந்த மக்கள் இந்தளவு தூரம் இறங்கிவந்துள்ளமை மிகப்பெரியதொரு நிலைமையாகும். இந்த மக்கள் இதனைவிட கீழே இறங்கிவருவார்கள் என நாம் எதிர்பார்ப்பது ஆரோக்கியமாகாது.
எனவே ஏக்கிய மற்றும் ஒருமித்த சொற்பதங்களை ஏற்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வந்துள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் விட்டுக்கொடுப்பை பயன்படுத்தி இந்தப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடவேண்டும். தமிழ் தலைவர்கள் இந்தளவு தூரம் இறங்கிவந்த பின்னரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாவிடின் ஒருபோதும் விடிவு கிடைக்காது. அதுமட்டுமன்றி இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் அபாயம் ஏற்படும்.
குறிப்பாக ஏக்கிய மற்றும் ஒருமித்த என்ற சொற்பதங்களை ஏற்று தீர்வைக்காண முன்வந்துள்ளமை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நாங்கள் நன்றிகூறவேண்டும். அவர்களுக்கு நன்றியை கூறிக்கொண்டு இந்தப் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடின் ஒருபோதும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
தமிழ் மக்கள் இதனைவிட கீழே இறங்கிவருவார்கள் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதனையும் குழப்பி தடையை ஏற்படுத்துவதற்கு வடக்கு, மற்றும் தெற்கில் இனவாதிகள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தெற்கில் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும், வடக்கில் சிவாஜிலிங்கம், விக்கினேஸ்வரன் போன்றவர்களும் அனைத்தையும் குழப்பி தீர்வைக் காணவிடாமல் தடையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவர்களின் இந்த இனவாத செயற்பாட்டை தோற்கடிக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும். இல்லாவிடின் தற்போதைய இந்த அருமையான சந்தர்ப்பத்திலும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாமல்போய்விடும். அதுவும் தமிழ் மக்கள் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் கீழே இறங்கி வந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி எம்மால் தீர்வைக்காண முடியாவிடின் ஒருபோதும் இதற்கான சாத்தியம் ஏற்படாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் தமிழ் மக்களுக்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM