மாகாண சபைத்தேர்தலை வலியுறுத்தி ஆறுகட்சிகளுடன் இணைந்து செயற்பாடு; அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு எதிராக கூட்டுச்செயற்பாடு: தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பில் தீர்மானம்

19 Jul, 2026 | 10:44 AM
image

(ஆர்.ராம்)

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வருகின்மையை தீவிரமாக கவனத்தில் கொண்டு  பொது தளத்தில் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதற்கு எதிராக அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞனத்தின் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணி வரையில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் நாகலிங்கம் இட்ணலிங்கம் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

சுதந்திர இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்து வாழ்வதற்கு விலக்கப்பட்டதன் காரணத்தால் தான் தனிநாடு என்ற கோரிக்கை எழுந்தது. ஆகவே பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு மீளப்பெறாதவகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மிக அடிப்படையான கோரிக்கையாக உள்ளது. அந்தவகையில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான விடயங்களை அடுத்த தலைமுறையினருக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் எடுத்துரைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

தற்போதைய நிலையில் கல்வி, சுகதாரம் என்பன மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். காணி,பொலிஸ் ஆகிய அதிகாரங்களைக் கோரும் நாங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்கு துணைபோக முடியாது.

குறிப்பாக தேசிய பாடசாலை தேசிய வைத்தியசாலை என்ற போர்வையில் அதிகாரங்கள் மீளப் பெறப்படுவதற்கு துணைபோக முடியாது. அதிகாரங்கள் பற்றிய விளக்கமில்லாது தேசிய பாடசாலையாக இருந்தால், தேசிய வைத்திய சாலையாக இருந்தால் எமக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து செயற்படுபவர்களுக்கு உரிய விளக்கங்களை வழங்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், நீண்டகாலப் போராட்டத்தின் அடிப்படையில் எமக்கு கிடைத்த மிகச்சிறிய அதிகாரங்களையும் மீண்டும் மத்தி பெற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எவரும் துணைபோகக் கூடாது என்பதை பகிரங்கக் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

அதேநேரம் ஆறுகட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ள. அந்த தளமானது, நாட்டின் மொத்த சனத்தொககையில் 25சதவீதமான மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்க்கட்சிகளின் பொதுத்தளமாகும். அந்த தளமானது மக்களது விடயங்களில் இணங்கும் விடயங்களை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கானதாகும்.

அதனடிப்படையில், புதிய அரசியலமைப்பு, காணிப்பிரச்சினை, மாகாண சபைத்தேர்தல் விடயங்களை குறித்த கூட்டணி முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பில் குறித்த ஆறுகட்சிகள் ஒன்றிணைந்த தளத்தைப் பயன்படுத்தி அவ்விடயங்களை கொழும்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து எடுத்துரைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடயங்களை ஆறுகட்சிகளின் கூட்டுத்தளத்தில் அதனை வெளிப்படுத்தவுள்ளேன்.

இதேநேரம் நானும், சாணக்கியனும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து உரையாடியுள்ளோம். அந்தவகையில் அவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் செய்து மந்திரிமனை உள்ளிட்ட விடயங்களை பார்வையிட்டுள்ளார். மந்திரிமனை தொடர்பில் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

அதேபோன்று குருந்தூர் மலை விவகாரம் உள்ளிட்ட விடயங்களும் உரையாடப்பட்டுள்ளன. குருந்தூர் மலை விடயத்தில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டளையும் அவரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொல்லியல் திணைக்களத்தை மையப்படுத்தி எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பலனாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்குள் சில அதிகாரங்கள் கிடைத்துள்ளன. அவை பற்றாக்குறையாக இருந்தாலும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கும் செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது என்று சகலருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பளை வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளை மத்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகளாகும். அதேபோன்று தேசிய பாடசாலையின் பெயரால் பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அவ்வாறான அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய பாடசாலைகளின் பெயரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலைகள் எவையும் அவ்விதமான வகைக்குள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை.அவற்றை மாகாணம் கையாள்வதற்கான சுற்றிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்பார்த்துள்ளோம்.

அவ்விதமான நிலையில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என்று எவரும் அதிகாரங்கள் மீள மத்திக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும்.

தற்போது ஆறுகட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அந்த அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக பொதுவான விடயங்களின் ஒன்றிணைந்து செயற்பாடவே எதிர்பார்த்துள்ளன. அதனை நாங்கள் வரவேற்றுள்ளோம். அந்தவகையில் அதிகாரங்கள் மீளப்பெறப்படுத்தல், ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு தொடர்ச்சியான எடுத்துரைப்புக்களைச் செய்வதற்கு குறித்த கட்டமைப்பு செயற்படவுள்ளது.

மேலும் ஆறுகட்சிகள் கூட்டணியானது, செயற்படுத்தக்கூடிய விடயங்களையே முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

கேள்வி: ஆறுகட்சிகளின் இணைவு சம்பந்தமாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளனவே?

சுமந்திரன்: கட்சிகள் கூட்டாகச் செயற்படத் தீர்மானத்தாலும் கேள்விகள் உள்ளன. தனியாகச் செயற்பட்டாலும் கூட்டாகச் செயற்படவில்லை என்ற கேள்விகள் உள்ளன. எவ்வாறாக இருந்தாலும், பொதுமக்களின் விடயங்களில் இணங்கிச் செயற்படக்கூடிய விடயங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது

சுரேஷ்: விமர்சனங்களை முன்வைப்பவர்கள், வடக்கு,கிழக்கில் உள்ள ஆளும் தரப்பினர் தான். அவர்களுக்கு தான் இந்த விடயம் பிரச்சினையாக உள்ளது. பொதுமக்களின் விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதில் பிரச்சினை இல்லை. அந்தச் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13