(எம்.மனோசித்ரா)
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்து கடுவலை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன், தற்போதைய அரசாங்க உறுப்பினர்களுக்கு ஞாபக மறதி போன்ற மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டால் நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு எதிராகக் கடுவலை சட்டத்தரணிகள் சங்கம் கூடி, இந்த முன்மொழிவை முழுமையாக நிராகரித்து ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பலப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு, அது குறித்த விபரங்கள் பிரதான சங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதியரசர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தின் கீழ் தகுதியான புதிய நீதிபதிகளை ஜனாதிபதியால் உடனடியாக நியமிக்க முடியும். அவ்வாறு செய்யாமல், ஓய்வுபெறும் வயதிலிருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை மட்டும் நீடிக்க முயல்வது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாரியளவில் பாதிக்கும்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்தியிலும் இலங்கைக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அரசியல் தேவைகளுக்காக நீதித்துறையை வளைக்க முற்பட வேண்டாம்.
அதேவேளை, நாட்டில் கட்டடத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வரவழைக்க செய்ய வேண்டும் என்றும் அண்மையில் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்து நகைப்புக்குரியது.
தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேசியது நினைவில் இல்லாத ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளதாகவும், குத்தகை அடிப்படையில் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு 20 கிலோ அரிசி தருவதாகக் கூறிவிட்டு, பின்னர் அதைத் தான் கூறவே இல்லை என அந்த அமைச்சர் மறுத்ததே இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையிலிருந்து இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் நிலையில், இலங்கைக்குள் தொழிலாளர்களை வரவழைக்கப்போவதாகப் பகல்கனவு காணும் அமைச்சர்களின் கருத்துக்களை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM