கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி

Published By: Digital Desk 3

16 Jul, 2026 | 11:38 AM
image

குணப்படுத்த முடியாத மற்றும் கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியுடைய நபர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் 'உதவிகரமான இறப்பு' சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் அவை அனுமதி அளித்துள்ளது.

சுமார் 14 ஆண்டுகால பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல. கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுமே இது அனுமதிக்கப்படும்.

பிரான்ஸ் குடிமக்கள் அல்லது அங்கு சட்டப்பூர்வமாக வசிக்கும் தகுதியுடைய, உயிருக்கு ஆபத்தான இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து கடுமையான உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

வெறும் மன ரீதியான துன்பங்கள் மட்டுமே இதற்கான தகுதியாகக் கருதப்படாது. கடுமையான மனநலக் கோளாறுகள் அல்லது அல்சைமர் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி கிடையாது.

நோயாளி தனது முழு சுயநினைவோடு, சுதந்திரமாக இந்த முடிவை எடுக்க வேண்டும். மேலும், ஒரு வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் நிபுணர் குழுவினால் அவரது நிலை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே இதற்கான அனுமதி வழங்கப்படும்.

தகுதியான நோயாளிக்கு நச்சுப் பொருள் வழங்கப்படும். அதனை நோயாளி தானாகவோ அல்லது ஒரு மருத்துவரின் உதவியுடனோ உட்கொள்ளலாம்.

பிரான்ஸ் தேசிய சபையின் கீழ் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 291 வாக்குகளும், எதிராக 241 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வலதுசாரி மற்றும் பழமைவாதக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தின் மேலவையை தவிர்ப்பதற்காக, அரசாங்கம் ஒரு சிறப்பு அரசியலமைப்பு விதியைப் பயன்படுத்தியுள்ளது.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது உடனடியாகச் சட்டமாகாது.

பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளபடி, இந்த சட்டமூலம் இறுதி தீர்மானத்திற்காகப் பிரான்சின் மிக உயரிய அரசியலமைப்பு அமைப்பான அரசியலமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.

இந்த கவுன்சில் சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து அனுமதி அளித்த பின்னரே இது உத்தியோகபூர்வ சட்டமாக நடைமுறைக்கு வரும்.

அரசியலமைப்பு கவுன்சிலின் அனுமதியைப் பெற்றால், ஐரோப்பாவில் ஏற்கனவே கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் பிரான்சும் இணையும். உலகளவில் கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58