(எம்.ஆர்.எம்.வசீம்)
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவின் ஏற்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கான விசேட குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (14) நீர்கொழும்பு அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே, கம்பஹா மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) சுகத் கித்சிறி மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் ஆகியோர் உள்ளிட்ட பிரதேச சபை செயலாளர்கள், முஸ்லிம் மதத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள் உட்பட பிரதேச மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே, முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீடு தற்போது அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளுக்கு இந்த நிதி விரைவாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
இம்முறை 42 வது தேசிய மீலாதுன் நபி விழாவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பிரதான விழாவில் 2000 க்கும் மேற்பட்ட பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்காக பிரதான விழா மேடை மற்றும் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துதல், தேவையான சுகாதார மற்றும் பொது வசதிகளை வழங்குதல் அத்துடன் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ள விசேட நினைவு நூலின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
தேசிய மாநாட்டுடன் இணையாக சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக நலன்புரிச் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட விசேட வேலைத்திட்டத் தொடரொன்றை ஆகஸ்ட் மாதத்தில் செயல்படுத்துவதற்கும் குழு தீர்மானித்துள்ளது.அதன்படி, ஆகஸ்ட் 23 ஆம் திகதி காமச்சோட பள்ளிவாசலில் நடைபெறும் விசேட மரநடுகை வேலைத்திட்டம், அன்றைய தினமே போருதொட முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெறும். விசேட இரத்ததான சமூக நலன்புரி முகாம் மற்றும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி பிற மத சகோதர மக்களிடையே கலாசார புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக பெரியமுல்லை முஸ்லிம் பள்ளிவாசலில் " எனது பள்ளிவாசலுக்கு வருகை தாருங்கள் எனும் வேலைத்திட்டம் ஆகியன இதில் அடங்கும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM