இரசிகர்களின் பலத்த வரவேற்பு மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு மத்தியில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் போட்டிகளை பிரபல விளையாட்டுத்துறை தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இலங்கையின் முதன்மையான தொழில்முறை ரி20 லீக் கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்), தனது 6ஆவது அத்தியாயத்துடன் 2026 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (ஐபிஜி) நிறுவனத்தின் வர்த்தக உரிமத்தின் கீழ் நடத்தப்படும் லங்கா பிறீமியர் லீக், தெற்காசியாவின் முன்னணி ரி20 தொடர்களில் ஒன்றாகத் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் இலங்கை வீரர்கள் இணைந்து விளையாடி, தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த களமாக லங்கா பிறீமியர் லீக் உருவெடுத்துள்ளது.
நடப்பு பருவத்தில் 62 உள்ளூர் வீரர்களும், 32 சர்வதேச வீரர்களும் தங்களது கிரிக்கெட் ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
இந்தத் தொடரானது உள்ளூரில் உள்ள திறமையான இளம் வீரர்களுக்கு சர்வதேச அளவிலான அனுபவத்தையும், உயர்தரப் போட்டிச் சூழலையும் வழங்குவதுடன், இலங்கை கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உலகளாவிய கிரிக்கெட்டுடனான அதன் தொடர்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.
இன்னும் மூன்று தினங்களில் ஆரம்பமாகவுள்ள எல்பிஎல் தொடரின் ஆயத்தம் குறித்து எல்பிஎல் தொடரின் உத்தியோகபூர்வ வர்த்தக உரிமையாளரும், ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகருமான அனில் மோகன் சங்தார் கருத்து தெரிவிக்கையில்,
'உலகளாவிய கிரிக்கெட் அரங்கில் லங்கா பிறீமியர் லீக் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. இந்த அத்தியாயத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பதிவு செய்துள்ளமை, உலகெங்கிலும் உள்ள வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த லீக் பெற்றுள்ள பெரும் வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. எங்களது 6ஆவது அத்தியாயத்தை எட்டும்போது, ஒரு வெற்றிகரமான தொடரை நடத்துவதையும் தாண்டி, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அடித்தாளமிடுவதே எமது முக்கிய நோக்கமாகும். இளம் திறமையாளர்கள் உலகின் சிறந்த வீரர்களுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அனுபவத்தை வழங்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்த லீக்கின் தொடர்ச்சியான வளர்ச்சி, நாம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும் நம் முன்னேயுள்ள பிரகாசமான வாய்ப்புகளுக்கும் சான்றாகும்' என்றார்.
இதேவேளை, லங்கா பிறீமியர் லீக்கின் பணிப்பாளர் சமன்த தொடங்வெல கருத்துத் தெரிவிக்கையில்,
'லங்கா பிறீமியர் லீக்கின் தொடர்ச்சியான பயணத்தில் 6ஆவது அத்தியாயம் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். இம்முறை பங்கேற்கும் வீரர்களின் தரம் மற்றும் பன்முகத்தன்மை, சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து வரும் இலங்கை வீரர்களின் கலவையுடன் ஒரே மேடையில் போட்டியிடத் தயாராக உள்ள தொடரின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது. உலகத்தரம் வாய்ந்த ஒளிபரப்பு, ரசிகர்களின் பேராதரவோடு, மிகச் சிறந்த ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தை வழங்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடரானது, சர்வதேச முன்னணி நட்சத்திரங்களையும், இலங்கையின் சிறந்த வீரர்களையும் ஒன்றிணைத்து, இதுவரை இல்லாத அளவில் மிக வலிமையான வீரர்கள் வரிசையைக் கொண்டதாக அமைந்துள்ளது. மொயின் அலி, ஜிம்மி நீஷாம், ஷக்கிப் அல் ஹசன், தஸ்கின் அஹமத், வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக்க போன்ற முன்னணி நட்சத்திரங்களின் ஆற்றல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
அத்துடன், இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் விஜய் சங்கர் முதன்முறையாக லங்கா பிறீமியர் லீக்கில் அறிமுகமாகவுள்ளமை, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய தொடராக எல்பிஎல் தொடர் மாறியுள்ளதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச வீரர்களின் சாதனை அளவிலான ஆர்வம், ரசிகர்களின் அதிகரித்த வரவேற்பு மற்றும் உலகளாவிய ரீதியில் விரிவடைந்து வரும் அதன் தடம் ஆகியவற்றின் மூலம், எல்பிஎல் 2026 கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டவுள்ளது. தனது 6ஆவது அத்தியாயத்தை எட்டும் லங்கா பிறீமியர் லீக், பிராந்தியத்தின் மிகக் கவர்ச்சிகரமான ரி20 தொடர்களில் ஒன்றாகத் தனது நிலையைத் தொடர்ந்து பலப்படுத்தி, திறமையாளர்கள், ரசிகர்கள் மற்றும் பங்காளர்களை ஒன்றாக இணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM