சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: 4 ஆண்டுகால போர்நிறுத்தம் முறிந்தது!

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 12:58 PM
image

தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையம் மீது சவூதி அரேபியா குண்டுவீசியதாகக் குற்றம் சாட்டி, யேமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் மூலம், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே நிலவி வந்த 4 ஆண்டுகால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ ஊடகப் பேச்சாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாத ஹவுத்தி போராளிகளால் தெற்கு பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட" ஏவுகணைகளைத் தாங்கள் நடுவானில் மறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரு தரப்பிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவூதி அரேபியா மீது ஹவுத்திகள் நடத்தியுள்ள முதல் தாக்குதல் இதுவாகும். சவூதியின் இந்தத் தாக்குதலை "நேரடி ஆக்கிரமிப்பு" எனக் குறிப்பிட்டுள்ள ஹூதிகள், இதன் மூலம் அமைதிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, யேமனின் வடக்குப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி அமைப்பு, சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி அரேபியா வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.

எனினும், இந்தத் தாக்குதலை சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற, யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமே நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. யேமனின் இறையாண்மையை மீறி ஈரான் நாட்டு விமானம் ஒன்று சனாவில் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே அதன் ஓடுதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக யேமன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது.

சவூதி வான்பரப்பைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பிற சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஹவுத்திகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை செங்கடல் வழியேயான குழாய்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. ஹவுத்திகளுடனான இந்த நேரடிப் போர் மீண்டும் தீவிரமடைந்தால், செங்கடல் வழியேயான சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகம் பெரும் சவாலுக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சனா விமான நிலையத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றை ஹவுத்திகள் தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தங்களது பணியாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் யேமனின் இந்த உள்நாட்டுப் போர், உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58