தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தைக் குடித்த ஆசிரியை: இந்தியாவில் அதிர்ச்சிச் சம்பவம்!

13 Jul, 2026 | 04:16 PM
image

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து தவறுதலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய ஆசிரியை ஒருவர், கடுமையான உள்வயிற்றுக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியை, டில்லி வீதியிலுள்ள அர்ஜுன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தாகம் எடுத்ததால் குடிநீர் கேட்டுள்ளார்.

நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர் ஒருவரிடம் பணம் கொடுத்து, அருகில் உள்ள கடையிலிருந்து குளிர்ந்த தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார்.

அந்த ஊழியர் வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்துள்ளது. அந்த கடையின் குளிர்சாதனப் பெட்டியில் இந்த அமில போத்தல் வைக்கப்பட்டிருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போத்தலில் இருப்பது அமிலம் என்பதை அறியாத ஆசிரியை, அதனை ஒரு மடக்கு குடித்த உடனே அவரது தொண்டையில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலறியடித்தபடி அவர் கடையை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள உள்ளூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள அதிநவீன மருத்துவ மையத்திற்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தின. அதில், ஆசிரியை தனது தாயாருடன் நகைக் கடையில் அமர்ந்திருப்பதும், கடைக்காரர் போத்தலை நீட்டிய சில நொடிகளில் அவர் நிலைதடுமாறி வெளியில் ஓடுவதும் பதிவாகியுள்ளது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி அனிதா சவுகான், 

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நகைக் கடை உரிமையாளர் உரிய உரிமம் இன்றி கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் பெரிய கொள்கலன்களில் இருந்த அமிலத்தை, பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீர் போத்தல்களில் மாற்றி ஊற்றி வைத்துள்ளார்.

யாரோ ஒருவர் அந்த அமில போத்தலை தவறுதலாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக் கடை மற்றும் பலகாரக் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து இதுவரை முறைப்படியான முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், முழுமையான விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58