(க.சிவலிங்கமூர்த்தி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அரசாங்கத்தினால் ஒருபோதும் கைவிட முடியாத பொறுப்பு உள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாட்டின் தற்போதைய கொள்ளளவை விடவும் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளமையே இந்த நெருக்கடிகளுக்கு மூலக்காரணம் என இரண்டாம் தலைமுறை அமைப்பின் தலைவரும் ரோஹண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகள் ஆகிய அனைவரும் மனிதர்கள் என்ற ரீதியில் தமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது எமக்குக் கிடைத்துள்ள தரவுகளின்படி, இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்புக்குள் தாங்க முடியாத அளவுக்கு கைதிகளும் தடுப்புக்காவலில் உள்ளோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் இந்த நெருக்கடிக்கு முறையான பொறுப்புக்கூறலை வழங்கியதாகத் தெரியவில்லை. சிறைச்சாலை கட்டமைப்பை நவீனமயப்படுத்தாமை மற்றும் இடவசதிகளை விரிவுபடுத்தத் தவறியமையின் நேரடி விளைவாகவே இன்று இந்த மோதல் சம்பவமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த கால தவறுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு புதிய ஆணையை வழங்கியுள்ளனர். எனவே, தற்போதைய அரசாங்கம் வெறுமனே பேச்சளவில் மட்டும் நின்றுவிடாமல், இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.
இதற்கு தீர்வு காண வேண்டுமாயின், நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதில் அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும். அத்துடன், சிறைச்சாலைகளுக்குள் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவரும் ஆளுங்கட்சியின் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் பாரம்பரிய பாணி மிகவும் கவலைக்குரியது. இந்த விடயத்தை வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒரு வெற்று விவாதமாக மாற்றிக்கொள்ளக் கூடாது.
நாட்டு மக்கள் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதே பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்வதற்காகத்தான். எனவே, சிறைச்சாலையின் ஒட்டுமொத்த செயல்முறையையும் அவதானித்து, இதனை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தாமல் இதற்கான உண்மையான தீர்வுகளை தேட வேண்டும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM