அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு "நிச்சயமாக பழிவாங்கப்படும்" என அவரது மகனும், ஈரானின் புதிய அதி உயர் தலைவருமான ஆயதுல்லா மொஜ்தாபா கமேனி சனிக்கிழமை (11) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் தொடங்கியதில் இருந்து, புதிய அதி உயர் தலைவர் விடுத்துள்ள முதலாவது பொதுச் செய்தி இதுவாகும். இந்த அறிக்கை ஈரானிய அரச தொலைக்காட்சியில் வாசித்துக் காட்டப்பட்டுள்ளது.
பழிவாங்குதல் என்பது "நாட்டின் கோரிக்கை" எனவும், அது "நிச்சயமாக" நிறைவேற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பழிவாங்கும் நடவடிக்கையானது ஈரானை மட்டும் சார்ந்திருக்கவில்லை எனவும், அது "உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான மக்களை" பொறுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றவாளிகள் மற்றும் அவமானத்திற்குரிய கொலையாளிகளிடமிருந்து, தியாகியான தலைவர் மற்றும் இந்த இரு போர்களிலும் தியாகிகளான அனைவரினதும் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது மிக விரைவில் நிறைவேற்றப்படும்; உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சுதந்திர மனிதனும் இந்த தெய்வீகப் பணியின் ஒரு பகுதியை நிறைவேற்றுவார்கள்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போரின் தொடக்கத்தில், கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவர் 37 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் 8 ஆம் திகதி ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தாபா கமேனி நியமிக்கப்பட்டார். சக்திவாய்ந்த ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் முழுமையான ஆதரவோடு அவர் இந்தப் பதவிக்கு வந்தபோதிலும், பதவி ஏற்றது முதல் இன்றுவரை அவர் ஒருமுறை கூட ஈரானிய மக்களின் முன்னிலையில் தோன்றவில்லை.
அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய அதே வான்வழித் தாக்குதலில் மொஜ்தாபா கமேனியும் சிக்கியிருந்ததாகவும், இதனால் அவரது முகம் சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் சிரேஷ்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர் அவரது புகைப்படம், காணொளி அல்லது குரல் பதிவு எதுவுமே வெளியிடப்படாததால் ஈரானுக்குள் பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. புதிய தலைவர் காயமடைந்திருந்தாலும், அவர் தங்களுக்கு முன்னால் தோன்ற வேண்டும் என ஈரானிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியில் தங்களுக்குப் பெரிய பொருளாதார நன்மைகளைத் தரும் என ஈரான் நம்புகிறது.
தற்போதைய மோதல்களால் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இலட்சக்கணக்கான மக்கள் திரண்ட இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், மறைந்த தலைவர் அலி கமேனியின் உடல் நாட்டின் மிக புனிதமான வழிபாட்டுத் தலத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM