(நெவில் அன்தனி)
மொரோக்கோவுக்கு எதிராக பொஸ்டன், பொக்ஸ்பரோ விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற பீபா உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரான்ஸ் அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாகத் தெரிவானது.
இந்த வருட உலகக் கிண்ணத்தில் பொஸ்டனில் விளையாடப்பட்ட கடைசிப் போட்டி இதுவாகும்.
போட்டியின் முதலாவது பகுதியில் கிடைத்த பெனல்டியைத் தவறவிட்ட கிலியான் எம்பாப்பே, அதற்கு பிராயச்சித்தமாக இரண்டாவது பகுதியில் கோல் போட்டு அணியை முன்னிலையில் இட்டார். சற்று நேரத்தில் ஊஸ்மான் டெம்பெல் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.

இந்தப் போட்டியில் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் இலகுவாக வெற்றிபெற்றது என்று கூறமுடியாது.
ஏனெனில் கோல்போடுவதற்கு பிரான்ஸ் 21 முயற்சிகளை எடுத்துக்கொண்டது. அவற்றில் எம்பாப்பேயின் பெனல்டி உட்பட பெரும்பாலானவற்றை மோரோக்கா கோல்காப்பாளர் யாசின் பூனு தடுத்து நிறுத்தி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றார்.
இப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மொரோக்கோவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த பிரான்ஸுக்கு 26ஆவது நிமிடத்தில் பெனல்டி கிடைத்தது.
கிலியான் எம்பாப்பேயை தனது பெனல்டி எல்லைக்குள் நூசய்ர் மஸ்ராஊய் வீழ்த்தியதாலேயே பிரான்ஸுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
ஆனால், எம்பாப்போ உதைத்த பெனல்டியை மொரோக்கோ கோல்காப்பாளர் யாசின் பூனூ மிகவும் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மொரோக்கோ கோல் காப்பாளர் பல முயற்சிகளைத் தடுத்த வண்ணம் இருந்தார்.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் 6 நிமிட இடைவெளியில் பிரான்ஸ் இரண்டு கோல்களைப் போட்டு மொரோக்கோவை தடுமாறச் செய்தது.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மொரோக்கோ பெனல்டி எல்லைக்குள்ளிருந்து எம்பாப்பே பந்தை பலமாக உதைத்து முதலாவது கோலைப் போட்டார்.
இந்த உலகக் கிண்ணத்தில் எம்பாப்பே போட்ட 8ஆவது கோல இதுவாகும்.

ஆறு நிமிடங்கள் கழித்து பெனல்டி எல்லைக்கு வெளியே இருந்து ஊஸ்மான் டெம்பெல் தாழ்வாக உதைத்த பந்தை கோல்காப்பாளர் யாசின் பூனூ தடுக்க முயற்சித்தபோதிலும் அது அவரது இடது கையில் பட்டு கோலினுள் புகுந்தது.
அதன் பின்னர் வேறு கோல்கள் போடப்படாத நிலையில் பிரான்ஸ் 2 - 0 என வெற்றியீட்டி 3ஆவது தொடர்ச்சியான தடவையாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM