(நெவில் அன்தனி)
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக வலைபந்தாட்ட அணியிடம் இருந்து சிறந்த அனுபவங்களையும் புதிய விடயங்களையும் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி கயனி திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இரண்டு அணிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டி முடிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கடைசிப் போட்டியின் இறுதிக் கட்டத்தில் கடுமையாக போராடிய இலங்கை 59 - 60 என்ற கோல்கள் வித்தியாசத்தில் லின்கன் பல்கலைக்கழக அணியிடம் தோல்வி அடைந்தது.
ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கு தயாராகி வரும் இலங்கை அணிக்கு, லின்கன் பல்கலைக்கழக அணியுடனான போட்டிகள் சிறந்த பயிற்சிக்களமாக அமைந்தது என கயனி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை வலைபந்தாட்ட வரலாற்றில் நியூஸிலாந்து தேசத்தைகச் சேர்ந்த அணி ஒன்றுடன் விளையாடக் கிடைத்தமை இதுவே முதல் தடவையாகும் எனவும் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்த இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவி தமாரா தர்மகீர்த்தி ஹேரத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கயனி மேலும் கூறினார்.
இதேவேளை, தொழில்முறை வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் நால்வர் லின்கன் பல்கலைக்கழக அணியில் இடம்பெறுவதாகவும் அவர்கள் தேசிய அணியில் விரைவில் இடம்பெறுவார்கள் என நம்புவதாகவும் லின்கன் பல்கலைக்கழக அணி அதிகாரி ஈலும் ப்றவுண் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் இரண்டாம் மூன்றாம் ஆட்டநேர பகுதிகளில் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
முன்னாள் அணித் தலைவிகளான கயஞ்சலி அமரவங்ஷ, துலங்கி வன்னித்திலக்க ஆகிய இருவரும் பந்து பரிமாற்றங்களின் போது ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததால் லின்கன் பல்கலைக்கழகத்துக்கு பல கடவைகள் இரட்டைப் பந்து பரிமாற்ற வாய்ப்புகள் கிடைத்தன.
போதாக்குறைக்கு தற்போதைய அணித் தலைவி திசலா அல்கம, ரஷ்மி ஆகிய இருவரும் சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டதும் இலங்கை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்றைய போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை திறமையாக விளையாடி 18 - 14 என முன்னிலையில் இருந்தபோதிலும் அடுத்த ஆட்ட நேர பகுதியில் இலங்கை வீராங்கனைகள் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததால் அப் பகுதியை லின்கன் பல்கலைக்கழக அணி 19 - 13 என தனதாக்கிக்கொண்டது.
இடைவேளையின்போது 33 - 31 என்ற கோல்கள் வித்தியாசத்தில் லின்கன் பல்கலைக்கழக அணி முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது ஆட்டநேர பகுதியில் இலங்கை அணியினர் தவறுகள் இழைத்ததைப் பயன்படுத்தி லின்கன் பல்கலைக்கழக அணி அப் பகுதியை 15 - 12 என தனதாக்கியது.
கடைசி ஆட்டநேர பகுதியில் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய இலங்கை அப் பகுதியை 16 - 12 என தனதாக்கிக்கொண்ட போதிலும ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் 60 - 59 என லின்கன் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 5 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் லின்கன் பல்கலைக்கழகம் கைப்பற்றியது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அணியில் சிறந்த வீராங்கனைக்கான விருது துலங்கி வன்னித்திலங்கவுக்கு வழங்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எண்ணற்ற தவறுகளை இழைத்து இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த ஒருவருக்கு எப்பிடி சிறந்த வீராங்கனை விருது வழங்க முடியும் என முன்னாள், இந்நாள் பயிற்றுநர்கள், தேர்வாளர்கள் கேள்வி எழுப்பினர்.
லின்கன் பல்கலைக்கழகம் சார்பாக சிறந்த வீராங்கனை விருதை லில்லி மார்ஷால் வென்றெடுத்தார். தொடர் நாயகி விருதை டய்யானா டே தனதாக்கிக்கொண்டார்.
இப் போட்டியை ஏற்பாடு செய்த தமாரா தர்மகீர்த்தி ஹேரத்துக்கு இலங்கை அணியினர் நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM