(செ.சுபதர்ஷனி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்கள், பிரேத பரிசோதனையின் பின்னர் புதன்கிழமை (08) காலை பொரல்லையில் உள்ள சிறைச்சாலை தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டு அரச மரியாதையுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய, பிரிவிடைபெறும் அதிகாரிகளின் பூதவுடலுக்கு அவர்களது குடும்பத்தாரும் சக அதிகாரிகளும் கண்ணீர்மல்கத் அஞ்சலி செலுத்தியிருந்தமை காண்போரைக் கண்கலங்க வைக்கும் காட்சியாக இருதயத்தில் உறைந்தது.
நீர்கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிகாரிகளின் உயிரற்ற தேகங்களை வைக்கப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்ட பேழைகளை, வாகனங்களில் இருந்து இறக்கிய சக அதிகாரிகள் துயருக்கு மத்தியிலும், உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதை அளித்து தமது தோள்களில் தாங்கி வந்திருந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் பூதவுடல்கள் சிறைச்சாலை தலைமையகத்தின் பரிசோதனை மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சார்ஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ, சார்ஜன்ட் பி.என்.என். தரங்க, சார்ஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி, சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச, சார்ஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார, சார்ஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன மற்றும் சார்ஜன்ட் ஏ.டி. தரங்க ஆகிய அதிகாரிகளே மேற்படி மோதலில் உயிர்தியாகம் செய்திருந்தனர்.
புதன்கிழமை (08) சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரமல்லாது, உயிரிழந்த அதிகாரிகளின் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என அவர்களை இழந்து தவிக்கும் இரத்த உறவுகளும் சிறைச்சாலை தலைமையகத்தை நேற்று கண்ணீர்த் துளிகளால் நனையச் செய்திருந்தனர்.
கடமைக்குச் சென்றிருந்த தமது அன்பார்ந்தவர்களை மீண்டும் உயிரற்ற உடல்களாகப் பார்க்க வேண்டிய தருணம் ஏற்படக்கூடும் என கனவிலும் எண்ணவில்லை என்ற உயிரிழந்தோரது உறவுகளின் அழுகுரல்களும் அங்கிருப்போரையும் கண்ணீர்மல்கச் செய்யும் காட்சியாக இருந்தது. பணியிடத்தில் நண்பனாக, சகோதரனாக, தன் குடும்ப உறவைப் போலப் பழகிய சக அதிகாரியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத சக அதிகாரிகளும் வாய்விட்டு கதறி கண்ணீர் வடித்திருந்தனர். பாதுகாப்புத்துறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் குடும்பத்தாரை விடத் தமது பணியிடங்களில் உள்ள அதிகாரிகளுடனேயே அதிக காலத்தைச் செலவிடுகின்றனர்.
சீருடை அணிந்து கடமையில் இருப்போரைக் கம்பீரத்துடன் பார்த்துப் பழகிய பலருக்கும், நேற்றைய தினம் ஒவ்வொரு அதிகாரியும் வெளிப்படுத்தியிருந்த துயரம் மனதைப் பிழியும் வகையில் இருந்தது. இந்நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் சிறைச்சாலை தலைமையகத்துக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். இதன்போது கண்ணீர் வடித்தபடி ஒரு சில சிறை அதிகாரிகள், காலையில் தங்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சக தோழர்கள், மாலையில் சாடலமாக கிடப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என மிகுந்த வேதனையுடன் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.
மேலும், அங்கு நின்ற அந்த அதிகாரி துணிச்சலாகச் செயற்பட்டிருக்காவிட்டால், 15 க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியில் தப்பியிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் ஒட்டுமொத்த அதிகாரிகளினதும், பொதுமக்களினதும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அனைவரையும் காப்பாற்றிய அந்த அதிகாரி ஒரு தேசிய வீரன். அவருக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என சக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகப் பாடநெறிகளையும் கற்று, அதற்கமையவே கைதிகளை நடத்துவதாகவும், அவர்களுக்கு எவ்வித அமானுஷ்யமான கொடுமைகளும் இழைக்கப்படுவதில்லை என்றும், கைதிகளுக்குள் மனிதர்களும் மிருகத்தனமானவர்களும் கலந்தே காணப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.
சிறு பிரச்சினையைத் தான் இவ்வளவு தூரம் வளர்த்துள்ளார்கள். எமக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளையும், முறையான விசேட பயிற்சிகளையும், அதற்கான திட்டங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நாம் எதற்கும் தயாராக இருக்கின்றோம் எனவும் அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் இறுதி அஞ்சலி மரியாதையைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் இறுதிச் கிரியைகளுக்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM