கோழிகள் முட்டையிட, சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தாயின் பாலைக் குடித்து வளரும் பாலூட்டிகளைப் போன்று, கோழிகளிலும் கருக்கட்டாத முட்டைகள் சூலகத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படும். இந்த கருக்கட்டாத 'கருமுட்டை'கள் சேவல் மிதிக்கும்போது வெளிவரும் விந்துகளுடன் சேர்ந்தால், அவை கருக்கட்டிய முட்டைகளாக வெளியேறும். சேவலின் விந்துகளுடன் சேராதவை கருக்கட்டாத முட்டைகளாக உருக் கொள்ளும். இந்த முட்டைக்குள் கரு – உயிர் இருக்காது. பேட்டுக் கோழிகளை வெட்டும்போது உள்ளே வட்டவடிவ சின்னச் சின்ன மஞ்சள் நிற முட்டைகள் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். சேவல் கோழி, பேட்டுக் கோழியை மிதிக்காவிட்டாலும் இவைகள் கருக்கட்டாத முட்டைகளாக தொடர்ந்து வெளியேறும்.
மனிதர்கள் உட்பட பாலூட்டிகளில், விந்துடன் இணைந்து கருக்கட்டாத முட்டைகள் அழிந்து, மாதவிடாய் காலத்தில் குருதியுடன் வெளிவரும். ஆனால் கோழிகளில் அப்படியல்ல. அவை கருக்கட்டாத, கரு உயிர் அற்ற முட்டைகளாக வெளியேறும். ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க, முட்டைகளை அடை வைக்கிறோம். அப்போது, சில முட்டைகள் குஞ்சு பொரிக்காது கூழாகின்றன. இங்கு கூழாகும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகள். குஞ்சு பொரிக்கும் முட்டைகள் கருக்கட்டிய முட்டைகள்.
கோழிப் பண்ணைகளில் சிறிய கூடுகளில் வளரும் ஆயிரக்கணக்கான பேடுகளை, கிரமமாய் 'விசிற்'பண்ணி சில்மிஷம் பண்ண, சேவலால் முடியாது. பண்ணைகளில் சேவல் வளர்க்கப்படுவதும் இல்லை. இதனால் பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகளில் உயிர்க்கரு இருக்காது. ஆனால் மற்ற எல்லாச் சத்துக்களும், கருக்கட்டிய முட்டைகள் போன்று இருக்கும்.
பசுவிலிருந்து வரும் பாலுக்கும், பண்ணைகளிலிருந்து வரும் கருக்கட்டாத, கருஉயிர் அற்ற முட்டைகளுக்கும் வித்தியாசமில்லை. இவை பாலைப் போல புரதம், கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய சைவ முட்டைகள்.
முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள், கறிக்கோழி இனங்களல்ல. கறிக்கோழி வளர்ப்பில் சேவலாக இருந்தாலென்ன பேடுகளாக இருந்தாலென்ன அவற்றின் சதைதான் முக்கியம். ஆனால் முட்டைக்காக வளர்க்கப்படுக் கோழிக் குஞ்சுகள் எல்லாமே பேடுகளாக வளரவேண்டும். முட்டையிடும் கோழி இனங்களில் சதைவளர்ச்சி இருக்காது. இவற்றை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்தால் பண்ணைக்காரர் திவாலாகிவிடுவார்.
கிராமங்களில் சேவல் கோழிகளையும் முட்டையிட்டு ஓய்ந்த பேட்டுக் கோழிகளையும் அடித்தே குழம்பு வைப்பார்கள். ஆனால் கறிக்கோழிகள் எனப்படும் புரொயிலர் கோழிகள் இனவிருத்தி செய்யப்பட்ட பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. காரணம் புரொயிலர்கோழி இனங்கள் 45 நாட்களில் இரண்டு கிலோவரை வளரக்கூடியன. இதற்குமேல் அவற்றின் சதை வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிடும். இதனால் 45 நாட்களுக்கு மேல் கறிக் கோழிகளை வளர்ப்பது இலாபகரமானதல்ல. பண்ணைகளிலிருந்து சந்தைக்குவரும் புரொயிலர் கோழிகள் பெரும்பாலும் நாற்பத்தைந்து நாட்கள் உயிர் வாழ்ந்தவையே!
இவை உயிருடன் வாழ்ந்த நாட்களைவிட உறைகுளிர்ப் பெட்டிகளில் அதிக காலம் இருந்தவை என்பதே உண்மை. 32 நாட்களிலேயே இரண்டு கிலோ இறைச்சியை கொடுக்கக்கூடிய கறிக்கோழியை இப்பொழுது இனவிருத்தி செய்துள்ளார்கள். இந்த இனத்துக்கு கோப் (Cobb) என்று பெயர்.
கறிக்கோழிகள், அங்கிங்கு திரும்ப முடியாத சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுவன. அவற்றைக் கூண்டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓடமுடியாது. 32 நாட்களில் இரண்டு கிலோவரை வளரும் கோப் இன கறிக்கோழிகளின் கால்களால் அதன் உடல் பாரத்தை தாங்கமுடியாது விழுந்துவிடும். கூண்டுக்குள் இருந்தபடியே தீன் தின்னும் கோழியின் உடல்வளரும் வீதத்துக்கேற்ப இருதயம் வளர்வதில்லை. இதனால் கோழியின் சிறிய இருதயத்தால் பெரிய உடலுக்கு இரத்தத்தைப் பாய்ச்ச முடிவதில்லை.
நாட்டுக்கோழிகள் 45 நாட்களில் கால் கிலோவும் தேறமாட்டது. ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் புரொயிலர் கோழிகள் எப்படி இரண்டு கிலோ நிறைக்குமேல் விருத்தியடைகின்றன? என்ற கேள்வி நியாயமானதே.
வளர்ச்சிக்கான ஹோர்மோன்களை கோழித்தீனுடன் கொடுப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் குற்றமாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் கோழித் தீனுடன் ஹோமோன்கள் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. சதை வளர்ச்சிக்கான ஹோர்மோன்களின் விலை அதிகமாதலால் இது இலாபகரமானதல்ல. ஆனால் புரொயிலர் கோழி இனங்கள் விரைவில் சதைவைக்குமாறு இனவிருத்தி செய்யப்பட்டவை. இவற்றின் உடலுக்குள் விரைவில் சதைவளர்வதற்கான மரபணுக்களுண்டு. இந்த மரபணுக்கள் நாளொன்றுக்கு 50 கிராமுக்குமேலான சதையை வளர்க்கும் வகையில் ஹோர்மோன்களை கோழியின் உடலுக்குள் உற்பத்திசெய்யும்.
கறிக்கோழியின் தசைகளில் பாவிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஹோமோன்கள், கோழியை உட்கொள்ளும் மனித உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாமென நம்பப்படுகிறது.
இதனால் தான் பிள்ளைகளுக்கு அதிக கறிக்கோழி கொடுப்பது நல்லதல்ல என்றும் பெண்பிள்ளைகள் குறைந்த வயதில் பூப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமெனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இவை விஞ்ஞான ரீதியாக இன்னமும் நிரூபிக்கப்படவில்லை!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM