யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷவை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.
இதேபோன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இராணுவக் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷவைவை உரிய விசாரணைக்கு உட்படுத்தி செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து ஏனைய மனித புதைகுழிகள் தொடர்பிலும் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
யாழ்ப்பாணம், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி குமாரசுவாமி 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரை தேடிச் சென்ற தாயார், சகோதரன், அயல்வீட்டுக்காரர் ஆகியோர் படைத் தரப்பினரால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலை விசாரணையின் போது லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ உட்பட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்தது. இதில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன உட்பட்டோருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. இதன்போது செம்மணி பகுதியில் 300–400 பேர் வரையிலானோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன ராஜபக் ஷ தகவல் வழங்கியிருந்தார்.
அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் சோமரத்ன ராஜபக் ஷ அடையாளம் காட்டிய ஒரு பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன. அதன்போது 15 எலும்புக் கூடுகள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தன. இதில் 2 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டும் இருந்தன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்காக லண்டன் க்ளாஸ்கோ பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று வரையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டனவா அல்லது இல்லையா என்ற விடயத்தில் தெளிவற்றத்தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து அந்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போதே தற்போது வரையில் இந்த மனித புதைகுழியில் 400 இற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 380 எலும்புக்கூடுகள் வரையில் மீட்கப்பட்டுள்ளன. தற்போது அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக ஜூலை மாதம் 15ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
செம்மணி மனித புதைகுழியானது இலங்கையிலேயே அதிகூடிய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பாரிய புதைகுழியாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்தப் புதைகுழி அகழ்வு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட போது செம்மணி புதைகுழி தொடர்பில் பல்வேறு தகவல்களை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது மனைவியின் மூலம் அவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதில் சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட்டால் செம்மணி விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
செம்மணி பகுதியை விட அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் சடலங்கள் புதைக்கப்பட்டமை தனக்கு தெரியும் என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தில் சாட்சியளிக்க தயார் என்று லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ கூறியுள்ள போதிலும் அவரிடம் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்கு இன்னமும் அரசாங்கமானது நடவடிக்கை எடுக்கவில்லை.
செம்மணி புதைகுழி விவகாரத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று சோமரத்ன ராஜபக் ஷ அறிவித்ததையடுத்து காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தலைவர் உட்பட்ட சிலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சோமரத்ன ராஜபக் ஷவை சந்தித்திருந்தனர். இரு தடவைகள் இத்தகைய சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. இந்த சந்திப்பு குறித்து தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அண்மையில் செம்மணி புதைகுழிக்கு விஜயம் செய்திருந்த நீதியமைச்சர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சோமரத்ன ராஜபக் ஷவின் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதன்போது பொதுமன்னிப்பு வழங்கினால்தான் சோமரத்ன ராஜபக் ஷ உண்மைகளைக் கூறுவதாக தெரிவித்திருக்கின்றார். உண்மையைக் கூற வேண்டுமென நினைப்பவர் இவ்வாறு செய்வாரா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
செம்மணி புதைகுழி தொடர்பிலான தகவல்களை முதன்முதலில் சோமரத்ன ராஜபக் ஷவே நீதிமன்றத்தில் 1997ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். இதனையடுத்தே அங்கு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் புதைகுழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய அரசாங்கக் காலத்தில் அதற்கு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது சோமரத்ன ராஜபக் ஷ கூறியதைப் போன்று அங்கு பெருமளவு சடலங்கள் புதைக்கப்பட்டன என்பதை நிரூபிக்கும் வகையில் 400 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தற்போது மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் உண்மைகளைக் கூறுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
இந்த புதைகுழியுடன் சம்பந்தப்பட்ட அன்றைய இராணுவ அதிகாரிகள் தொடர்பிலும் அவர் அன்றைய காலப் பகுதியில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அன்றைய அரசாங்க காலத்தில் அந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. தற்போது புதிய விடயங்கள் தொடர்பில் சாட்சியளிமக்கத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக் ஷ கூறியிருக்கின்றார். உண்மையிலேயே அன்று இடம்பெற்ற இந்த கொடூரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டுமானால் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கு கண்கண்ட சாட்சியாகவுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷ மீது உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும்.
அவர் சர்வதேச விசாரணையாளர் முன்னிலையில் சாட்சியளிக்கத் தயார் என்றே கூறியிருக்கின்றார். ஆனாலும் செம்மணி மனித புதைகுழி விசாரணைகளில் தொடர்ச்சியாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவரிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து அதனை வாக்குமூலமாக பதிவு செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இன்றியமையாததாகவுள்ளது.
நாட்டில் பாரிய புதைகுழியாக இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அன்று 1995ஆம் ஆண்டில் யாழ். குடாநாடு படையினர் வசம் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலப் பகுதியில் பெருமளவானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு சாட்சியாகவே இன்று செம்மணி மனித புதைகுழி திகழ்கின்றது.
1994ஆம் ஆண்டு சமாதான தேவதையாக ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த மனித புதைகுழி உருவாக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர் பிரதமராக பதவி வகித்த போது இரத்தினபுரியில் புதைகுழி ஒன்று அகழப்பட்டது. அதில் பெருமளவான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. அன்று ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது எலும்புக் கூடுகளாக அவை இருக்கலாம் என்று அன்று கருதப்பட்டது.
மாத்தறை புதைகுழி தோண்டப்பட்டதையடுத்தே ஜனாதி பதியாக சந்திரிகா குமாரதுங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தெற்கில் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவரது ஆட்சியிலேயே செம்மணி மனித புதைகுழி உருவாக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். எனவே, இந்த புதைகுழி தொடர்பில் சோமரத்ன ராஜபக் ஷவிடம் உரிய வகையில் விசாரணைகளை நடத்தி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM