பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரத்தன்மை தொடர்பில் தற்போது தெற்கில் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக முற்று முழுதாக நீக்க வேண்டும் என்று சிங்கள, பெளத்த பேரினவாத தரப்பினரும் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இருவர் உட்பட்ட மூவருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்திருக்கின்றது.
இதன் அடிப்படையில் தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ மனு தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்படலாம் என்று கருதியமையின் காரணமாகவே கோட்டாபய ராஜபக் ஷ இந்த முன் ஜாமீன் மனுவினை தாக்கல் செய்திருக்கின்றார்.
நாட்டில் மூன்று தாசப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது பயங்கரவாத தடைச் சட்டமானது தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தது. கேட்ட கேள்வியின்றி எங்கும், எப்போதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் படைத் தரப்பினரால் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சித்திரவதைகள் மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டு தமிழ் இளைஞர், யுவதிகள் பல்லாயிரக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டனர்.
அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு எதிராக மட்டுமே தெற்கின் சிங்கள, பெளத்த அரசியல்வாதிகள் பயன்படுத்திய நிலையில் தற்போது அந்த சட்டத்தின் கீழேயே பலரும் கைது செய்யப்படும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியாக இருந்த சுரேஷ் சலே பெருமளவான தமிழர்களை புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்திருப்பார். இதேபோன்றே முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக் ஷவும் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த போதும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெருமளவான தமிழர்களை தடுத்து வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்திருந்திருப்பார்.
இவ்வாறு அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தினை தமிழர்கள் மீது ஏவி விட்ட தெற்கின் அரசியல் தலைமைகள் மற்றும் படைத் தரப்பின் உயர்மட்டத்தினர் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இதன் காரணமாகவே தற்போது தெற்கின் சிங்கள, பெளத்த தேசியவாத சக்தியினர் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டமானது மனிதகுலத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய ஜனநாயக அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர உட்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கோர முகம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் நீதி அமைச்சரான விஜேதாச ராஜபக் ஷவும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார். ‘சுரேஷ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், விசாரணை என்ற பெயரில் கொலை செய்யக் கூடாது. பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் மோசமானது. மனிதகுலத்துக்கு எதிரானது. யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் எதற்கு? அந்த சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றது. இதனை அனுமதிக்க முடியாது’ என்று முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீதியமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக் ஷ, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலீடாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், அந்த முயற்சி கைகூடியிருக்கவில்லை. இன்று அவர் பயங்கரவாத தடைச் சட்டமானது மனித குலத்துக்கு எதிரானது என்றும் அதனை நீக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்கின்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் பிரதான கட்சியான தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது. தேசிய மக்கள் சக்தியானது எதிரணியில் இருந்தபோது பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக ஒழிப்போம் என்றே கூறி வந்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியானது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை கொண்டு வருவதற்கு முயல்கின்றது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த சட்டவரைபு தயாரிக்கப்பட்டதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 45 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சட்டத்தினால் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி பெரும் பாதிப்புகளை சந்தித்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே அடக்கியொடுக்கப்பட்டிருந்தன. இந்தச் சட்டத்தின் பிடியில் பெருமளவான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சிக்கியிருந்தனர். இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெரும் அநீதிகளை சந்தித்த மக்கள் விடுதலை முன்னணியானது தற்போது அந்தச் சட்டத்தை முற்றாக நீக்காது புதிய சட்ட வரைபை கொண்டு வர எத்தணிக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் கோரி வருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக இலங்கை அளித்த வாக்குறுதி பல வருடங்களாகியும் நிறைவேற்றப்படாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை யொன்றையும் வெளியிட்டிருக்கின்றது. அதே போன்றே சர்வதேச மன்னிப்பு சபை உட்பட பல்வேறு தரப்பினரும் இத்தகைய கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
அன்று பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று வடக்கு, கிழக்கில் இருந்தே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ் இளைஞர், யுவதிகள் இந்தச் சட்டத்தினால் சொல்லொணா துன்பங்களை அனுபவித்ததன் காரணமாகவே இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
தற்போது தெற்கிலும் சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகள் இந்த சட்டத்தை நீக்குமாறு குரல் கொடுத்து வருகின்றனர். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM