இலங்கையிலிருந்து கடந்த காலங்களில் 20 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதை தெரிந்து கொள்ளாத பெளத்தவாதிகளே ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக முரண்படுகின்றனர். அகதிகள் விடயத்தில் இலங்கையின் கொள்கையில் மாற்றம் இல்லை. அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ரோஹிங்யா அகதிகளை பெளத்த பிக்குகள் தாக்கியிருந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். பொலிஸார் இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்தமை உண்மையானால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ரோஹிங்யா அகதிகளை பெளத்த பிக்குகள் தாக்கியதாகவும் பொலிசார் இந்த குழப்பங்களை வேடிக்கை பார்த்ததாகவும் தெரியவரும் நிலையில் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வாறு செயற்பட போகின்றது என கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அகதிகளை பெளத்த பிக்குகள் தாக்கியிருந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். பொலிசார் இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்தமை உண்மையானால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தற்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் தஞ்சம் கோரியுள்ளதாக கூறிக்கொண்டு இன்று எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து அகதிகளாக வாழ்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மியன்மாரில் இருந்து 55 ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் 2013 ஆம் ஆண்டு மீண்டும் மியன்மாரில் இருந்து 101 ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டனர். ஆகவே இந்த காலத்தில் பெளத்த பிக்குகளுக்கு உண்மைகள் விளங்கவில்லையா? அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவுடன் இவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
அதனால் இந்த செயற்பாடுகள் எதையும் எதிர்க்க எந்தவொரு தேரருக்கும் தைரியம் இருக்கவில்லை. இன்று ஒரு சிலரின் தூண்டுதலில் இனவாதத்தை பரப்பும் வகையில் குழப்பங்களை விளைவித்து வருகின்றனர்.
இங்கு தங்கியுள்ளவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களின் பாதுகாப்பில் உள்ளனர். மாறாக இலங்கை அரசாங்கம் எந்த உதவிகளையும் செய்யவில்லை. ஆனால் அகதிகளாக வருவோரை நிராகரிக்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் உலகில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள 30 ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து பெளத்த பிக்குகள் கூச்சல் இடுகின்றனர். ஆனால் இலங்கையில் இருந்து 20 இலட்சம் மக்கள் உலகில் அனைத்து நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். யுத்த காலத்திலும் அதற்கு முன்னராக முரண்பாட்டுக் காலத்திலும் நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறிய நபர்களை ஐரோப்பிய நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான சகல உதவிகளையும் வழங்கி வருகின்றது. எமது நாட்டில் இருந்து அகதிகளை வெளியேற்றியவர்கள் தான் இன்று அகதிகள் குறித்து பேசுகின்றனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் மிகவும் மோசமான சம்பவமாகும். அகதிகளாக உள்ளவர்களை தாக்குவதோ வெளியேற்றுவதோ முழுமையாக மனிதாபிமானம் அற்ற செயற்பாடாகும். புத்த பெருமான் ஒருபோதும் அவரது போதனையில் அடக்குமுறைகளை போதிக்கவில்லை. பெளத்த கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறும் ஒருசில பிக்குகளே இன்று மனிதாபிமானம் இல்லாத வகையில் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எவரும் பௌத்தம் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லாதவர்கள். ஒருவர் வாழ வழியில்லாது அகதியாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கையாள மனிதாபிமானம் இல்லாத நபர்களால் மட்டுமே முடியும். இலங்கையின் சட்டத்திற்கு அமைய அகதியாக வரும் எந்தவொரு நபரையும் இலங்கையின் பிரஜையாக்க அனுமதி இல்லை. இலங்கைக்கு சொந்தம் இல்லாத எவரையும் இலங்கையராக்க சட்டம் இல்லாத போது எவரையும் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்க முடியாது. இவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர். இதனை தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்து அவர்கள் மூலமாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இப்போது அகதிகள் தொடர்பில் எவ்வாறான கொள்கையை நாம் பின்பற்றி வருகின்றோமோ அதேபோன்றே தொடர்ந்தும் செயற்படுவோம். அகதிகள் வரும் நிலையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமை. எம்மாலான உதவிகளை நாம் செய்வதில் தவறில்லை. இது தவறான கொள்கையும் இல்லை. மியன்மாரில் பெளத்த முஸ்லிம் முரண்பாடுகள் இடம்பெற்று அங்கு மக்கள் பாதிக்கப்படுவது வருத்தத்திற்குரியது. ஆனால் அதை பயன்படுத்தி இலங்கையில் இனவாதத்தை கையில் எடுப்பது தவறானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM