பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய வகையில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலெழுந்திருக்கின்றது.
அதேபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை உரிய வகையில் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருந்த போதிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகளை உரிய வகையில் நடத்தவில்லை என்று கத்தோலிக்க ஆயர் மன்றம் குற்றம்சாட்டி வந்தது.
ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேபோன்றே இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரிகளான பிரேமானந்த உடலாகம, ரிஷாந் டி ரொஷான் அன்சார் ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தற்போது குற்றம்சாட்டியிருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கடந்த புதன்கிழமை கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, சுரேஷ் சலே தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளுடன் சுரேஷ் சலே நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதுடன் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார். இந்த விடயங்கள் அனைத்தும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதனைவிட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் சுரேஷ் சலே 5 பேரை நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட வழிபாட்டில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளதாகவும் சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக் கணினி போன்றவற்றின் கடவுச் சொற்களை வெளிப்படுத்த மறுத்து வருவதாகவும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால, குற்றம்சாட்டியிருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏதோவொரு வகையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதனை பறைசாற்றும் வகையிலேயே சுரேஷ் சலே விவகாரமானது சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளினால் தற்போது பூதாகரமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் உறுதி வழங்கியிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தன்னை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றினை கடந்த புதன்கிழமை தாக்கல் செய்திருக்கின்றார். விசாரணையின் போது தானும் கைது செய்யப்படக் கூடும் என்ற சந்தேகத்திலேயே அவர் இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளதாகவே தெரிகின்றது.
உண்மையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். அந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
இந்த விடயத்தில் பொறுப்புக்கூறும் செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இதேபோன்றே இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. அந்த பொறுப்புக்கூறும் செயற்பாட்டிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விலகி நிற்பதாகவே தெரிகின்றது.
இறுதி யுத்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமலாக்கப்பட்டனர். கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டனர், காணாமலாக்கப்பட்டனர். இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
கொழும்பில் 5 மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். இறுதி யுத்தக் காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணையின் போது திருகோணமலையில் கடற்படையினரால் வதைமுகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பிலும் அங்கு பலர் கொல்லப்பட்டமை குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்துடன் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட 14 கடற்படையினர் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவையடுத்து இந்த விசாரணை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அந்த விசாரணை மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தற்போது பிரதிவாதியாக இணைக்கப்பட்டுள்ளார். அதற்கமைய ஜூலை மாதம் 27ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த 5 மாணவர் உட்பட 11 தமிழர்கள் கடத்தப்பட்ட விசாரணை துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அந்த விடயத்தில் இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த வழக்கு விசாரணையை மீளவும் ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளையும் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். காணாமல் போனோர் விவகாரத்திலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காணாமல்போனோரின் பெருமளவானோர் உறவினர்களால் படைத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாகவும் படைத் தரப்பினரிடம் சரணடைந்தவர்களாகவுமே காணப்படுகின்றனர். எங்கு, எப்போது காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை விசாரிப்பதன் மூலம் அதற்கு காரணமானவர்களை கண்டறிய முடியும்.
இதேபோன்றுதான் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பொறுப்புக் கூறும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதை போன்று இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்றது. அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்களை யார் எந்தவகையில் செய்திருந்தாலும் அத்தகையவர்கள் தகுதி, தராதரம் பாராது நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM