உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : சாட்சியங்கள் வெளிவரும் நிலையில், தம்மைக் குற்றமற்றவராகக் காட்ட சுரேஷ் சலே முயற்சிக்கிறார் - வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

08 Jun, 2026 | 12:29 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தம்மைக் குற்றமற்றவராகக் காட்டிக்கொள்வதற்கு முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே முயற்சிக்கின்றார் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டினார். 

தங்காலையில் ஞாயிற்றுக்கிழமை (07) மக்கள் போராட்ட முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, கடந்த காலங்களிலும் தற்போதும் ராஜபக்ஷ தரப்பினரால் மிகச்சிறந்த இராணுவ அதிகாரி மற்றும் புலனாய்வுத் துறையின் மேதை என மேடைகளில் புகழ்ந்து பேசப்பட்டவர். இத்தகைய பெருமைக்குரியவராகக் கருதப்பட்ட சுரேஷ் சலே, சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிவதற்குள் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றார். சுரேஷ் சாலே உண்மையாகவே குற்றமற்றவர் என்றால், சட்ட ரீதியான விசாரணைகளின் மூலம் அதனை நிரூபித்துவிட்டு நீதிமன்றத்தின் ஊடாக வெளியில் வர முடியும். அதற்கு எவரும் தடையாக இருக்கப்போவதில்லை.

இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சுரேஷ் சலேவுக்கு நேரடித் தொடர்பு இருப்பதும், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதிலும் அதனைச் செயற்படுத்தியதிலும் அவரது பங்களிப்பு குறித்த தகவல்களும் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையிலேயே, அவர் தற்போது பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். சிறையில் தனக்கு வழங்கப்படும் உணவுத் தரம் குறித்துக் குறை கூறுவதும், தனக்குக் கடும் அசௌகரியங்கள் இருப்பதாகவும், சிறையில் தனது ஆடைகளைக் கழற்றி அவமானப்படுத்தியதாகவும், உயிர் மாய்த்துக்கொள்ளத் தூண்டும் வகையில் சூழல் இருப்பதாகவும் அவர் புலம்பத் தொடங்கியுள்ளார். இது முற்றிலும் திட்டமிட்ட செயற்பாடாகும்.

எந்தவொரு நபரும் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்படுவதில்லை என்பதை சுரேஷ் சலே உணர வேண்டும். ஆனால், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ஜனநாயக ரீதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எங்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தச் சிறை வாழ்க்கையில் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளும் துன்பங்களும் சுரேஷ் சலே அனுபவிப்பதாகக் கூறும் அசௌகரியங்களை விடப் பல மடங்கு மோசமானவை. அன்று நாங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரியபோது, இந்த அதிகார வர்க்கத்தினர் அமைதி காத்தனர். இறுதியில் எமக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் எங்களை விடுவித்தது. ஆனால், எமக்கு எதிராக வழக்குத் தொடர எந்தவொரு தரப்பும் முன்வரவில்லை.

இன்று சுரேஷ் சலேவுக்கு எதிராகப் பல சாட்சியங்கள் உள்ளன. அவர் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாகப் பல தரப்பினர் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். இத்தகைய வலுவான சாட்சியங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தம்மைக் குற்றமற்றவராகக் காட்டிக்கொள்ள சுரேஷ் சாலே முயற்சிக்கின்றார். இவ்வாறான இக்கட்டான சூழலில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்புவதற்காகவே அவர் இத்தகைய நாடகங்களை மேற்கொண்டு வருகின்றார்;. இந்த விவகாரத்தில் சுரேஷ் சலேவை முழுமையாகப் பாதுகாத்து, அவரைத் தூய்மையானவராகக் காட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34