அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு கொள்கைக்கான முதன்மை ஆலோசகரான ஸ்ரீராம் கிருஷ்ணன், ஜூன் மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அமெரிக்காவின் தேசியக் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய ஒருவரின் வெளியேற்றமாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து அவர் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பயணம் எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது விலகலுக்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக அமெரிக்கா எதிர்கொண்டு வரும் சில பெரிய சவால்களைக் கையாளுவதற்குத் தொடர்ந்து உதவப் போவதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கான தேசியக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஸ்ரீராம் கிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையிலேயே இந்த விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அரசாங்கமே சில செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்குகளை நேரடியாக வாங்குவது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்து வரும் வேளையில் இந்த மாற்றம் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெள்ளிக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப்,
இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது அமெரிக்கப் பொதுமக்களுடன் ஒரு கூட்டாண்மையை உருவாக்குவது போன்றதாகும் எனவும், அத்துடன் அடுத்த வாரமே செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆதரித்தாலும், அவரது நிர்வாகத்திற்குள் நிலவும் தேசிய பாதுகாப்பு சார்ந்த அச்சங்கள் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு இடையே பல மாதங்களாக நிலவி வந்த இழுபறி நிலை இதற்கு ஒரு சான்றாகும்.
உள்நாட்டு உளவு வேலைகள் மற்றும் முழுமையான தன்னாட்சி ஆயுத அமைப்புகளுக்கு தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்த அமெரிக்க ராணுவம் கோரியதற்கு ஆந்த்ரோபிக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்தது. இதன் காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் , அந்நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.
எனினும், தற்போது பொதுப் பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வரும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சந்திப்பைத் தொடர்ந்து இந்த பதற்றம் தணிந்துள்ளது.
புதிய நிர்வாக உத்தரவின்படி, முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்களது அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு, அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு சோதனைக்கு அவற்றை முன்வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான பிரம்மாண்ட தரவு மையங்களை உருவாக்குவது கடுமையான மின்சாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால், அது அரசியல் ரீதியான எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
கடந்தபெப்ரவரி மாதம் ஆற்றிய உரையில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கான மின் உற்பத்தி நிலையங்களை தாங்களே உருவாக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதம செயல்பாட்டு அதிகாரிகள், புதிய மின் உற்பத்தி மற்றும் ஆற்றல் திறன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM