வடகிழக்கு ஜப்பானில் உள்ள மின்னணுத் தொழிற்சாலை ஒன்றுக்குள் புகுந்து, நான்கு பேரைத் தாக்கிவிட்டுப் பிடிபடாமல் தப்பியோடிய கரடி ஒன்று, மனிதர்களைப் போலத் தாமாகவே ஜன்னலைத் திறந்து நள்ளிரவில் தப்பியோடியுள்ள விசித்திரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய அந்தக் கரடியின் காலடித் தடயங்களை ஆராய்ந்த நகர அதிகாரிகள், அது ஜன்னலின் பூட்டை விடுவித்து, தனது கைகளால் அதனைத் தள்ளித் திறந்து தப்பியோடியுள்ளதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், அந்தப் பெரிய கரடியானது தொழிற்சாலையிலிருந்த தண்ணீர்க் குழாயை அதன் முன் கால்களால் திறந்து தண்ணீர் குடித்ததை அதிகாரிகள் நேரில் கண்டுள்ளனர்.
"இந்தக் கரடி அசாதாரணமான முறையில் தீவிர புத்திசாலித்தனம் கொண்டது என நாங்கள் நம்புகிறோம்" என ஃபுகுஷிமா நகர மேயர் யூகி பாபா கியோடோ செய்தி நிறுவனத்திடம் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
குறித்த கரடி செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் புகுஷிமாவில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றுக்குள் புகுந்து நால்வரைத் தாக்கியுள்ளது. அதன் பின்னரே அதிகாரிகள் அதனைப் பிடிப்பதற்காக வியூகம் அமைத்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள மின்னணுத் தொழிற்சாலைக்குள் அது நுழைந்துள்ளது.
கரடியை உயிருடன் பிடிப்பதற்காக ஜப்பானியப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
கரடியை மயக்க மருந்துத் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் நிலைநிறுத்த முயன்ற போதிலும் அது தோல்வியடைந்தது.
கரடியைப் பொறிவைத்துப் பிடிக்கப் பழங்கள் மற்றும் தேன் துண்டுகள் வைக்கப்பட்ட போதிலும், கூண்டுக்குள் சிக்காமல் அந்த உணவுகளை மட்டும் மிகச் சாதுரியமாகக் கரடி சாப்பிட்டுச் சென்றுள்ளது.
கரடியைச் சுட்டுக் கொல்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் தொழிற்சாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிபொருட்கள் இருந்ததால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தயங்கியுள்ளனர்.
புதன்கிழமை இரவு தொழிற்சாலையின் விளக்குகளை முற்றாக அணைத்து, இருளுக்குள் கரடியைப் பொறிக்குள் வரவழைக்க அதிகாரிகள் முயன்ற போதே, அது ஜன்னல் பூட்டைத் திறந்து தப்பியோடியுள்ளது.
ஜப்பானில் அண்மைக்காலமாகக் கரடிகளின் மனிதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் கரடித் தாக்குதல்களால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாகக் கரடிகள் குளிர்கால உறக்கத்திற்குச் செல்வதற்கு முன்னரான இலையுதிர்காலப் பகுதியிலேயே இத்தாக்குதல்கள் அதிகம் நிகழும்.
தப்பியோடிய இந்தக் கரடியைத் தேடும் பணிகளுக்காக வியாழக்கிழமை முதல் அதிநவீன ட்ரோன் கருவிகளைப் புகுஷிமா அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர். அத்துடன், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தக் கரடியின் தப்பித்தமை தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாக மேயர் பாபா தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM