(எம்.மனோசித்ரா)
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி சமூகத்தில் கடுமையான விவாதங்களையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இத்தருணத்தில் இவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கான தேவை குறித்து அரசாங்கம் எவ்வித விளக்கமும் அளிக்காதிருப்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இது குறித்து ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அரசியலமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும். அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்வதாயின், அது அரசியலமைப்பில் செய்யப்படும் திருத்தத்தின் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறியாதிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194 ஆம் பக்கத்தில், புதிய அரசியலமைப்பு ஒன்று வரைபு செய்யப்பட்டு, அது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கடுமையான குரலெழுப்பியது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களே ஆவர்.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராட்டங்களை நடத்திய தற்போதைய ஆட்சியாளர்கள், தங்களது கடந்தகாலக் கூற்றுகளுக்கும் இன்று தாங்கள் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த முன்மொழிவின் மூலம் அரசாங்கம் அரசியலமைப்பைத் தெளிவாக மீறுவதுடன், நீதித்துறையின் சுயாதீனத்தில் நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறானதொரு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் எதனை எதிர்பார்க்கிறது? தற்போதைய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து பதவியேற்க தகுதியற்றவர்கள் என்றா? அல்லது ஏதேனும் இலக்கு வைக்கப்பட்ட ஒரு நபர் அல்லது சில நபர்களின் தேவைகளை நிறைவேற்றி, அதன் மூலம் நீதித்துறைக்கு மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துவதா? இக்கேள்விகள் சமூகத்தில் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களாகும்.
அதேபோன்று, தகுதியுடைய, பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்ட நீதிபதிகளுக்கான அக்காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடுவது அநீதியாகும். இது அரசியலமைப்பின் 28ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைத் தெளிவாக மீறும் செயலாகும்.
முழுமையான அரசியலமைப்புத் திருத்தமொன்றுக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டு, தங்களது சுய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான திருத்தங்களைக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு இத்தருணத்தில் அத்தியாவசியமானதாகும்.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்துடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். எனவே, ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக இந்த முன்மொழிவை மீளப் பெற வேண்டும். மக்களின் இறையாண்மைக்குச் சவால் விடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM