(க.சிவலிங்கமூர்த்தி)
லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவகாரங்களில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதிலும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதிலும் அரச இயந்திரம் காட்டும் இந்த மந்தநிலை இந்த நாட்டில் நீதி மழுங்கடிக்கப்பட்டதாக நான் கருதுகிறேன் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டினார்.
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (03) கேசரிக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், 2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை நீதியை நிலைநாட்ட முடியாமல் போயிருப்பது இந்த நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாக அமைந்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இணையவழி தொழில்நுட்பம் ஊடாகச் சாட்சியமளிக்க அழைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதை விட, குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்குச் சலுகைகளை வழங்கும் காலதாமதமான ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.
இது போன்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சட்டத்தின் போக்கைத் திசைதிருப்புவதையும், உண்மைகளை மூடிமறைப்பதையும் நாம் தொடர்ச்சியாகக் காண்கிறோம்.
இலங்கையின் சட்டக் கட்டமைப்பு என்பது அதிகாரம் படைத்த உயர் சமூக அடுக்கினரைப் பாதுகாக்கும் ஒரு அரணாகவே தற்போதைய சூழலில் செயற்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவகாரத்தில், மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள், குறிப்பாக மலல்; கோடா அறிக்கை மற்றும் அது தொடர்பான பிற ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், இன்னும் முழுமையாகப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
இவ்வாறான அறிக்கைகளை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ரகசியமாக வைத்திருப்பது, மக்கள் உண்மையை அறிந்துகொள்வதைத் திட்டமிட்டுத் தடுக்கும் ஒரு அரசியல் சூழ்ச்சியாகவே நான் கருதுகிறேன். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதிலும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதிலும் அரச இயந்திரம் காட்டும் இந்த மந்தநிலை, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண மக்கள் ஒரு தொலைபேசி கடத்தல் போன்ற சிறிய குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டால், அவர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இறுதியில் சிறைச்சாலைக்குள் மரணத்தைத் தழுவும் பரிதாபகரமான சூழல் கூட உருவாகிறது. ஆனால், இவ்வளவு பாரிய குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிகார வர்க்கத்தினர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக இலகுவான முறையில், சலுகை அடிப்படையில் விசாரணைக்கு முகங்கொடுப்பது, இந்த நாட்டில் நீதித்துறை சார்ந்த வர்க்கப் பாகுபாட்டைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. அதிகாரம் படைத்த இந்த வர்க்கம், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்களின் சமூகப் படைப்பினை மேலும் வலுப்படுத்தவும் இத்தகைய ஜனநாயக மற்றும் சட்டவிரோத போக்கைக் கையாள்கிறது.
இத்தகைய அநீதிகளுக்கு எதிராக, சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின், இந்த அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் நடத்தும் மாயைகளையும், அவர்கள் மறைக்கும் உண்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியது எமது கடமையாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகவும் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வரை, நாங்கள் இந்தத் போராட்டத்தைத் தொடருவோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM