தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசு அதிகரிப்பு

03 Jun, 2026 | 05:21 PM
image

(என்.வீ.ஏ.)

பொன் விழா தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பணப்பரிசுத் தொகையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

இம் முறை தேசிய விளையாட்டு விழா தனது 50ஆவது அத்தியாயத்தை அரங்கேற்றுகிறது.

எனவே, பொன் விழா தேசிய விளையாட்டு விழாவை சிறப்பாக நடத்த இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை திணைக்களமும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான நகர்வல ஓட்டப் போட்டி இம் மாதம் 6ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ளதாகவும் பிரதான நிகழ்ச்சியும் கடைசி நிகழ்ச்சியுமான மெய்வல்லுநர் போட்டிகள் தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் டிசமபர் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு விழா தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சுனில் குமார கமகே,

'இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீரர்களுக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய முதலிடத்தைப் பெறும் வீரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 15,000 ரூபா பணப் பரிசு இம்முறை 30,000 ரூபாவாக இரு மடங்கு அதிகரிக்கப்படும்' என்றார்.

பிரதேச செயலக, மாவட்ட மட்டப் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தேசிய மட்டப் போட்டிகள் நடத்தப்படும்.

தேசிய விளையாட்டு விழா 32 ஒலிம்பிக் விளையாட்டுகளை உள்ளடக்கியது என்றும், தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதே பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரதேச மட்டத்திலிருந்து வீரர்கள் தேசிய மட்டத்திற்கு வரக்கூடிய வகையில் இந்த விளையாட்டு விழா திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மட்டத்தில் திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்