"மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உறுதி வழங்கியுள்ளன.
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலின் போது பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் 25 வீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தாம் தயார் என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கடந்த புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போதே பழைய முறைமையின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இங்கு கருத்து தெரிவித்திருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்துள்ள தனி நபர் பிரேரணையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இதனைவிட கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் அடிப்படையில் உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு அது குறித்து ஆராய்ந்து முடிவினை அறிவிக்கட்டும், அதற்கு முன்னர் பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இதனைவிட பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு சாதகமான வகையில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு வேட்புமனுத் தாக்கலின் போது 25 வீத ஒதுக்கீட்டை வழங்க எழுத்து மூலம் இணக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த விடயத்தில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் மாகாண சபைத் தேர்தலை பிற்போடாது உடனடியாக இந்த வருடத்துக்குள் நடத்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளது கோரிக்கையாகவுள்ளது. இதற்கான அழுத்தங்களை வழங்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தற்போது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உண்மையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தும் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது தற்போது நன்கு தெளிவாகியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வருடத்துக்குள் தேர்தலை நடத்தும் நிலைமை இல்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த முடியாது, தேர்தலை நடத்துவதற்கு இந்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா எந்தவகையிலும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தித்வா சூறாவளி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்த நிலையில், அதனை மறுக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். அதற்கான நிதி சிக்கல்கள் எதுவும் இல்லை. எனினும், தேர்தல் முறைமை தொடர்பான சட்ட சிக்கல்களுக்கு பாராளுமன்றக் குழு ஊடாக தீர்வு காணப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ள நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒரு பிரச்சினையில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்றே மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. தேர்தலைக் கண்டு அரசாங்கம் அச்சமடையவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.
அவர் அவ்வாறு தெரிவித்திருந்த நிலையிலேயே ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தனது மாற்று நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். அதனை மறுக்கும் வகையில் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து கூறியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இவ்வாறு தேசிய மக்கள் சக்திக்குள்ளேயே பல்வேறு முரண்பாடான நிலைமை காணப்படுகின்றது. இதனடிப்படையில் நோக்கும் போது மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்பது நன்கு புலனாகிறது.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வருட காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம் என்று தேசிய மக்கள் சக்தியானது உறுதி வழங்கியிருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போதும், பாராளுமன்றத் தேர்தலின் போதும் இத்தகைய உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் சாக்குபோக்குகளையே கூறி வருகின்றது.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழுவில் எதிரணியின் சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் புதிய முறைமை குறித்து ஆராய முடியும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் குழுவானது ஜூன் மாதத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், காலஅவகாசம் போதாது என்று கூறி குழுவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு தற்போது அரசாங்கம் முயன்று வருகின்றது. ஆனால், இதற்கும் எதிரணி உறுப்பினர்களின் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
அரசாங்கமானது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்துக்குள் நடத்துவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அது தொடர்பில் கணக்கெடுக்காத நிலைமை நீடித்து வருகின்றது. நாட்டில் மாகாண சபைகளுக்கு 2014 ஆம் ஆண்டின் பின்னர் தேர்தல் இடம்பெறவில்லை.
மக்களின் ஜனநாயக உரிமைகளை தோண்டிப் புதைக்கும் வகையிலேயே இந்த தேர்தலுக்கான இழுத்தடிப்பு அமைந்திருக்கின்றது. அன்று எதிரணியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தியானது சகல தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், இன்று ஆளுங்கட்சியான பின்னர் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனியாவது இந்த விடயத்தில் குழப்பத்தை தவிர்த்து தேர்தல் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM