(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால், இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரித்து செல்கிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தை பாரதூரமான விடயமாக கருதி நடவடிக்கை எடுக்க தவறினால், அதன் பெறுபேற்றை அனைவரும் அனுபவிக்க நேரிடும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் டொலர் டொலரின் பெறுமதி ஜனாதிபதியின் பேச்சு போன்று நேரத்துக்கு நேரம் மாறுபட்டு வருகிறது. காலையில் உள்ள பெறுமதி மாலையில் மாற்றமடைகிறது. இன்று காலையில் டொலரின் பெறுமதி 346 ரூபா என தெரிவிக்கப்படுகின்றபோதும் வெளியில் 355 ரூபாவாவுக்கே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் இருக்கும் வங்கிகளுக்கு மத்தியிலும் டொலரின் பெறுமதி வித்தியாசமாகவே காணப்படுகிறது.
ஆனால் டொலர் பெறுமதி அதிகரித்தாலும் நாட்டுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என நிதி பிரதி அமைச்சர் தெரிவிக்கிறார். இன்று சந்தையில் டொலர் இல்லை. டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது. ஒருகிலாே பால்மாவின் விலை 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் ஒரு கிலோ பால்மா 3 ஆயிரம் ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அனைத்து இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு பணவீக்கம் அதிகரித்து மக்களுக்கு வாழமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது.
நாட்டில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பதை வெளியில் இறங்கிப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் செவ்வாய்க்கிரகத்தில் இருந்தே கதைக்கிறார்கள். அதனால் நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.
அதேபோன்று ஜனாதிபதி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கடந்த சனிக்கிழமை வரி அதிகரித்து வர்த்தமானி வெளியிட்டார். ஆனால் அதற்கு முன்தினம் வெள்ளிக்கிழமை 1782 புதிய வாகனங்களுக்கு வங்கிகளில் (எல்.சி) கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு முடியும். இந்த வாகனங்கள் யாருடையது? ஜனாதிபதியின் ரீ பில்டிங் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் இருக்கும் கிஷான் பாலேந்திரன், ஜனாதிபதியின் வலது கையாக இருக்கும் தம்பிக்க பெரேரா மற்றும் இஷார நாணயக்கார ஆகியோரின் வாகனங்களாகும். அவர்களுக்கு இந்த செய்தி எவ்வாறு கிடைத்தது? இது மோசடி இல்லையா? இது திட்டமிட்ட குற்றமாகும். இறுதி வாரத்துக்குள் 4 ஆயிரம் வாகனங்களுக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் புதிய வாகனங்களாகும்.
அதேநேரம் வாகனம் தொடர்பில் சட்டம் கொண்டுவருவதாக இருந்தால் அனைவருக்கும் ஒரே மாத்திரி கொண்டுவர வேண்டும். பாவித்த வாகனங்களை இறக்குமதி செய்கின்றவர்களுக்கு வங்கியில் கடன் பற்றுப்பத்திரம் திறக்க முடியாது. அவர்கள் வங்கி கடன்பற்றுப்பத்திரம் திறந்து செசி இலக்கம் பிழை என்றால் வாகனம் கொண்டுவர முடியாது. இந்த சட்டம் கிஷான் பாலேந்திரன், தம்பிக்க பெரேரா மற்றும் இஷார நாணயக்காரவுக்கு இல்லை.
அத்துடன் நபர் ஒருவருக்கு வாழ்வதற்கு மாதத்துக்கு 16,571 ரூபா போதும் என குடிசன மதிப்பீடு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக நிதி பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார். புள்ளிவிபர திணைக்களத்தின் இந்த மதிப்பீடானது, வறுமைக்கோட்டின் இறுதி நிலையில் இருக்கும் ஒருவருக்கான செலாகும். ஆனால் உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் வறுமைக்கோட்டின் இறுதி நிலையில் இருப்பவர் ஒருவருக்கு 4.65 டொலர் தேவையாகும். அப்படியானால் சாதாரண நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 40,950 ரூபா தேவைப்படுகிறது. அரசாங்கம் தெரிவிப்பதுபோல் மாதத்துக்கு 16,571 ரூபா என்றால் நாள் ஒன்றுக்கு 550 ரூபாவாகும். 550 ரூபாவுக்கு 3 வேளை சாப்பிட முடியுமா என கேட்கிறேன். உலக வங்கியின் விதிகளின் பிரகாரம் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு இலட்சத்தி 63 ஆயிரம் ருபா தேவைப்படுகிறது.
எனவே, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் பசில் ராஜபக்ஷவும் இவ்வாறுதான் டொலரின் பெறுமதி அதிகரிக்கும்போது, இந்த சபைக்கு வந்து, டொலரின் பெறுமதி அதிகரித்தாலும் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
இறுதியில் முழு நாடும் பாதிக்கப்பட்டது. அந்த நிலையே மீண்டும், ஏற்டப்போகிறது. அதனாலே நாங்கள் இதன் பயங்கரமான நிலையை உணர்த்துகிறோம். அரசாங்கம் இதனை சாதாரணமாக கருதினால் அதன் பாதிப்பை அனைவரும் அனுபவிக்க நேரிடும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM