(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அரசியல் பேதங்களை மறந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் முன்வரவேண்டும் என தேசிய நாமல் உயன வனப்பூங்காவின் பாதுகாவலர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்தார்
நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாக திங்கட்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாட்டின் தற்போதைய நிலைமையை எண்ணும்போது ஒருபுறம் மிகுந்த கவலையாக இருக்கின்றது. அதேநேரம், தவறு செய்தவர்கள் மற்றும் தேசிய வளங்களைச் சூறையாடியவர்களுக்கு இயற்கை அன்னை உரிய தண்டனையை வழங்குவாள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பழிவாங்கும் நோக்கத்தில் செயற்படுவதை விடுத்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிய இடத்தினை வழங்கி நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டிய தருணம் இதுவாகும்.
தேசிய சொத்துக்களை அழித்தவர்கள் மற்றும் தேசிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவராயினும், அவர்களுக்குரிய தண்டனையை இயற்கை வழங்கும். அத்தகைய விடயங்களை சட்டத்தின் வசம் ஒப்படைத்துவிட்டு, அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இன்று சமூக வலைத்தளங்களைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் அதிகாரத்தைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தனிப்பட்ட அரசியல் லாபங்களை விடவும் நாடு குறித்து சிந்திப்பதே உண்மையான தேசப்பற்றாகும்.
மக்களின் இறைமையின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திற்கு ஐந்து வருட கால ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவே கசப்பான உண்மையாகும். எனவே, அந்த மக்கள் ஆணையை அவமதிக்காமலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சீர்குலைக்க முற்படாமலும், அனைத்துத் தரப்பினரும் ஒரே மேசையில் அமர்ந்து வட்டமேசைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாம் இன்று ஒரு தேசமாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம். சொல்லப்போனால் நாம் பூச்சிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பதைக் காட்டிலும், ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பாகும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக உழைக்கும் ஒருவருக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் மாத்திரமன்றி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களிடமும் மிகவும் வினையமாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM