சொகுசுக் கப்பலில் பரவிய கொடிய ஹண்டா வைரஸ் தொற்று, அங்கிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள 'எம்.வி. ஹோண்டியஸ்' கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் இதுவரை மூவர் (ஒரு டச்சு தம்பதி மற்றும் ஒரு ஜேர்மனி பெண்) உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மேலும் இருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
தாயகம் திரும்பிய ஒரு அமெரிக்கப் பிரஜைக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் விசேட உயிரியல் பாதுகாப்புப் பெட்டகங்கள் மூலம் நெப்ராஸ்காவில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாரிஸில் ஒரு பெண்ணுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த 22 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் தெரிவித்துள்ளார்.
டெனெரிஃபிலிருந்து விசேட விமானம் மூலம் மான்செஸ்டர் வந்தடைந்த 20 பிரித்தானியர்கள், விர்ரல் பகுதியில் உள்ள ஏரோ பார்க் வைத்தியசாலையில் 72 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை அறிகுறிகள் இல்லை. எனினும், ஏற்கனவே தொற்றுக்குள்ளான இரண்டு பிரித்தானியர்கள் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கப்பலிலிருந்து வெளியேறுவோர் 42 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் சிடிசி அதிகாரி வைத்தியர் ஜே பட்டாச்சார்யா, "இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது அரிதானது. கோவிட் போல இதைக் கருதிப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தத் தேவையில்லை" எனக் கூறி 42 நாள் தனிமைப்படுத்தலை மறுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், அமெரிக்காவின் இந்த தீர்மானம் "ஆபத்தானது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் அமெரிக்காவில் பரவும் 'ஆண்டீஸ்' ரக ஹண்டாவைரஸ் தொற்றே இந்தக் கப்பல் பயணிகளுக்குப் பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், காய்ச்சல், அதீத சோர்வு, வயிற்று வலி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஸ்பெயினில் உள்ள 14 பேர் இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் பல நாடுகளுக்கு மீட்பு விமானங்கள் இன்று பிற்பகல் அனுப்பப்படவுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM