ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அகில இலங்கை கம்பன் கழகம் ‘கம்பன் புகழ்’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது. ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று சிறுபான்மை சமூகங்களையும் ஆதரித்து நாட்டை நிர்வகித்து வரும் அநுரகுமார திசாநாயக்கவை பாராட்டும் வகையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கம்பன் கழகம் அறிவித்திருக்கின்றது.
இந்த விருது விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு பெரும் வரவேற்புக்கு மத்தியில் ‘கம்பன் புகழ்’ விருதினை பெற்றிருந்தார். இந்த விருதினை வழங்குவதற்கான காரணம் தொடர்பில் விழாவில் அறிவிக்கப்பட்டது.
“தமிழர்களின் மனக்குறைகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அடக்குமுறைகள் ஆங்காங்கு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் இலங்கையை நீங்கள் முழுமையாக ஆக்கித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் உங்களது நேர்மையான புரட்சிக்கர செயற்பாடுகளை பலப்படுத்த உங்களோடு நிற்கின்றார்கள் என்பதற்கான ஓர் அடையாளமாகவே இவ்விருது அமைகின்றது” என்று கம்பன் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின்னால் உள்ள இந்த நாட்டில் அரசியலில் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். இலங்கையின் பிரஜைகளாக இம்மண்ணின் வளர்ச்சிக்கு இந்நாட்டுத் தமிழ் மக்களும் பெரும் பங்களிப்பினை ஆற்றியுள்ளனர். ஆனால், இனவெறி பிடித்த சிலர் தமிழர்களை இந்நாட்டின் இரண்டாந்தர பிரஜைகளாக்க முயன்றனர். அதனால் ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழர்களது உயிர், உடல், உடமை என அனைத்தும் அழிக்கப்பட்டன என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கம்பன் கழகமானது இதுவரை ‘கம்பன் புகழ்’ விருதினை கலை, கலாசாரங்களை வளர்ப்பவர்களுக்கே வழங்கி வந்தது. இம்முறையே முதல் முதலாக ஜனாதிபதி ஒருவருக்கு இந்தக் கெளரவம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த விருதினை வழங்குவதன் மூலம் அவருக்கு ஒரு செய்தியை வழங்குவதற்கு கம்பன் கழகம் முயன்றுள்ளதாகவே தெரிகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன் என்று உறுதிமொழி வழங்கியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி மொழி வழங்கியிருந்தது.
இதனைவிட இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும். அதுவரை 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அரசியலமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம், புதிய அரசியலமைப்பினை விரைந்து உருவாக்க முடியும் என்றும் தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகவுள்ளது.
ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்புக்கான முயற்சி குறித்தோ தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியானது அக்கறை காண்பிப்பதாக இல்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், அந்த பொறுப்புக்கூறல் விடயத்தில் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை. தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அர சாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்தனர்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றிருக்கின்றது. இதேபோன்றே மலையகத்திலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகமாக அந்தக் கட்சி பெற்றிருந்தது.
இதிலிருந்து தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் எந்தளவு தூரம் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் என்ற விடயம் தெளிவாகியிருந்தது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற போதிலும் தமது பிரச்சினைகளுக்கு இன்னமும் அரசாங்கம் தீர்வுகாண முயலவில்லை என்ற கவலை, ஆதங்கம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஊழலை ஒழிக்கும் விடயத்திலும், போதைவஸ்து பாவனையை இல்லாது ஒழிக்கும் விவகாரத்திலும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனவாதம், மதவாதத்தை இல்லாதொழிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை உண்மையில் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.
ஆனாலும், தமிழ் மக்கள் விடயத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை ஜனாதிபதிக்கு உணர்த்தி அதனை சுட்டிக்காட்டும் வகையில் கம்பன் கழகத்தின் விருது வழங்கும் செயற்பாடு அமைந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு உங்களிடம் உள்ளது. அதனை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை பறைசாற்றும் வகையிலேயே இந்த விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். இன நல்லிணக்கத்துக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் இதன்போது உறுதியளித்திருக்கின்றார்.
“எமது நாட்டின் பிரச்சினைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைகளை நேர்மையுடனும் உறுதியுடனும் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். எமது நாட்டில் இனிமேல் இனவாதமோ மதவாதமோ தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டோம்"என்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கையிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்த விடயம் வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இனியாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதுவரையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்திலோ ஒரு அடி கூட அரசாங்கம் நகரவில்லை. கடந்த அரசாங்கங்கள் எவ்வாறு வாக்குறுதியை கொடுத்து விட்டு அதனை நிறைவேற்றாது காலத்தை இழுத்தடித்து வந்தனவோ அதேபோன்று தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.
நல்லிணக்க முயற்சியினை நிறைவு செய்வதற்கு இன்னமும் கால அவகாசம் தனக்கு வேண்டும் என்றும் கம்பன் விருது விழாவில் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்களாகின்றன. இனியும் கால அவகாசம் கோருவதானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு எந்தவகையிலும் உதவப் போவதில்லை. உரிய காலப் பகுதியில் அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்றே பொறுப்புக்கூறல் விடயத்திலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM