(எம்.மனோசித்ரா)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கல்லிலிருந்து பட்டை உரிப்பது போன்ற சாத்தியமற்ற காரியம் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறுவது, இந்த ஆட்சியின் போலி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் சட்டப்பூர்வமான தன்மை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த கால ஊழல்களைப் பேசிக்கொண்டு தற்போதைய மோசடிகளை மூடிமறைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் எவ்வளவு திருடினாலும், எத்தனை விசாரணைகள் நடத்தினாலும் எங்களை குற்றவாளியாக்குவதென்பது கல்லிலிருந்து பட்டை உரிப்பது போன்று இயலாத காரியமென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருக்கின்றார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்டாலும், அவர்களைக் கண்டுபிடிப்பது கல்லிலிருந்து பட்டை எடுப்பது போன்ற கடினமான காரியம் என்பதையே அவர் கூறுகின்றார்.
நிலக்கரி ஊழல், மத்திய வங்கியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி அல்லது கொள்கலன் தொடர்பான ஊழல் என எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அவற்றைச் சுமத்த முடியவில்லை.
மகிந்த ஜயசிங்க என்பவர் யார்? அவர் கூறுவது உண்மையா? என ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்புகின்றோம். எவ்வளவு விசாரணைகள் நடந்தாலும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அல்லது அரசியல்வாதிகளை கைது செய்ய முடியாது என அவர் எவ்வாறு கூற முடியும்? அவ்வாறெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வர உதவிய மக்களுக்கு இவர்கள் வழங்கும் செய்தி என்ன? நாங்கள் எவ்வளவு திருடினாலும், எவ்வளவு விசாரணைகள் செய்தாலும் எங்களைப் பிடிக்க முடியாது என்பதுதானா? அப்படியானால் எதற்காக ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டும்?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், கிராமத்து மக்களிடம் வாக்குக் கேட்கும்போதும் வழங்கிய வாக்குறுதிகள் இவையா? ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் பற்றிப் பேசினீர்கள். நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது, அதற்கு மேல் யாரும் இல்லை எனக் கூறினீர்கள்.
ஜனாதிபதியோ அமைச்சரோ அல்லது சாதாரண குடிமகனோ அனைவருக்கும் நீதிமன்றம் சமமானது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால் இப்போது இந்த பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் வந்து கூறுவது என்ன?
இதன் மூலம் ஜே.வி.பி-க்கு இன்று எந்தவிதமான சட்டப்பூர்வமான தன்மையும் இல்லை என்பது நிரூபணமாகிறது. ஏனெனில் இந்த அமைச்சரே பாராளுமன்றத்தில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறார்.
323 கொள்கலன் மோசடி பற்றிப் பேசுகிறார்கள். அது தொடர்பாக விசாரணை நடத்த நிதி அமைச்சரை அழைத்தால் அவர் வருவதில்லை, செயலாளர்கள் வருவதில்லை.
ஒருவர் தனது தூய்மையை நிரூபிக்க மிக எளிய வழி, தன் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அந்த விசாரணையை முதலில் எதிர்கொள்வதுதான். ஆனால் கொள்கலன் விசாரணை பற்றி இன்று பேசப்படுகிறதா? இந்த அரசாங்கம் தங்களைச் சுத்தமானவர்கள் என்று கூற முடியுமா?
அடுத்து நிலக்கரி ஊழல். இது பற்றி பாராளுமன்றத்தின் கோப் குழுவிலும் வெளியிலும் தொழிற்சங்கங்களும் நிபுணர்களும் விரிவாகப் பேசியுள்ளனர். தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டியுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் பொறியியலாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
முன்னதாக ஒரு மின் அலகுக்கு 45 ரூபாய் செலவான நிலையில், தற்போது அது 145-150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து 2011 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவரும்போது இவர்கள் ஏன் பழைய அரசர்களின் காலம் தொட்டு விசாரிக்க முற்படுகிறார்கள்? தன் மீது குற்றம் சாட்டப்படும்போது அதிலிருந்து விடுபட முயற்சிப்பதே இயல்பானது. முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என மாறி மாறி ஆட்சி செய்தபோது மக்கள் அவர்களை நம்பினர். ஏனெனில் அவர்கள் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
நாங்கள் இதற்கு முந்தைய அரசாங்கங்களை விடச் சிறந்தவர்கள், திருட மாட்டோம், வெளிப்படைத்தன்மையுடன் இருப்போம் என்று கூறிவிட்டு, இப்போது ஒரு குற்றச்சாட்டு வரும்போது பழைய அரசாங்கங்களின் தவறுகளைப் பேசுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஜே.வி.பி அரசாங்கம் ஏனையோரை விட நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறிவிட்டு, இப்போது நிலக்கரி ஊழல் பற்றி 2011 இலிருந்து விசாரணை நடத்தப் போவதாகக் கூறுவது சரியா? இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இவர்கள் நேர்மையானவர்கள் அல்ல.
தங்களும் பழைய அரசாங்கங்களைப் போன்றே பிரச்சினைகளைக் கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். இது குறித்து இன்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM