"பாம்ஸ் டுகெதர்'' திட்டம் ; கைத்தொழில் மறுமலர்ச்சியில் ஒரு தலைமைத்துவப் புரட்சி

06 May, 2026 | 02:31 PM
image

வடக்கு மற்றும் கிழக்கு கிராமங்களிலுள்ள பெண்கள் ஒரு புதிய யதார்த்தத்தைத் தினந்தோறும் நிரூபித்து வருகிறார்கள்.முறையான சந்தை இணைப்பும், வலுவான தலைமைத்துவமும் இருந்தால், வறுமை என்பது ஒரு நிரந்தரத் தடையல்ல. 

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் “Palms Together” (பாம்ஸ் டுகெதர்) வாழ்வாதாரத் திட்டம்.  2025 பெப்ரவரியில் சில பெண்களைக் கொண்டு தொடங்கிய இந்த முயற்சி, இன்று ஒரு மகத்தான சமூக இயக்கமாக மாறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து 102 பெண்கள் இதில் கைகோர்த்துள்ளனர்.  இதில் பனைப்பொருள் உற்பத்தியில் 85 பேரும், கைத்தறியில் 17 பேரும் அடங்குவர். 

வெறும் ஒரு வருடத்தில், பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் மொத்த விற்பனை ரூ. 15.9 இலட்சத்தை கடந்துள்ளது. தனித்துவமான தலைமைத்துவ மாதிரி (Leadership-based model) இந்தத் திட்டத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணம், இது ஏனைய திட்டங்களைப் போல வெறும் ‘பயிற்சி’ அளித்துவிட்டுச் செல்லும் ஒன்றல்ல. 

இது ஒரு தலைமைத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட (Leadership-led model) அமைப்பு. திட்டத்தின் ‘தலைவர்கள்’ (Leaders) மிகச்சிறந்த தொழிற்றிறன் கொண்டவர்கள் மட்டுமல்ல அவர்கள் மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

பொருளாதாரச் சூழல் அல்லது குடும்பக் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத, அல்லது நகர்ப்புறப் பயிற்சிகளுக்குச் செல்ல முடியாத பெண்களுக்காக, இந்தத் தலைவர்கள் பாலமாகச் செயற்படுகின்றனர். 

இத்தலைவர்கள் நகரங்களுக்குச் சென்று புதிய நுட்பங்களையும் சந்தைத் தேவைகளையும் கற்றுக்கொண்டு, அவற்றை அந்தந்தக் கிராமங்களிலேயே வசிக்கும் பெண்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள். இதன் மூலம் “கற்றுக்கொண்டே சம்பாதிக்கும்” (Earn while you learn) வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. 

இத்தலைவர்கள் உற்பத்தியை மேற்பார்வை செய்வதுடன், தரத்தைப் பேணுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டாமல், அவர்களை ஆளுமைப்படுத்த வழிவகை செய்யும் சூழலையே இத்தலைமைத்துவ முறை உருவாக்கியுள்ளது.

இத்தனை உறுதியான வெற்றி இருந்தும், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட தேசிய மட்டத்திலான அரச நிறுவனங்களிடமிருந்து இந்தத் திட்டத்திற்கு எதிர்பார்த்த அளவிலான தொடர் ஆதரவோ, முறையான அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

இருப்பினும், சில அரசு அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கியுள்ளதை நாம் பாராட்ட வேண்டும். குறிப்பாக, கிழக்கு மாகாண மீன்பிடித் துறை பணிப்பாளர் (Director of Fisheries, Eastern Province)  சுதாகரன் (Mr. Sutharan) வழங்கிய ஆதரவு மிகவும் முக்கியமானது. 

பயனாளிகளைத் தெரிவு செய்தல், தயாரிப்புகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என அவர் போன்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் தான் இந்தத் திட்டம் இன்று பல படிகளைத் தாண்டி வந்துள்ளது.

ஒரு அதிகாரி நினைத்தால் அடிமட்ட மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்குத் சுதாகரன்  செயற்பாடுகள் ஒரு சாட்சி.

 Avery Dennison Foundation போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் அங்கீகாரம் இந்தத் தொழிலின் தரத்தை உலக அளவில் பறைசாற்றுகின்றது.

UNDP, GIZ போன்ற முந்தைய திட்டங்கள் சந்தை விரிவாக்கத்தில் சந்திக்காத வெற்றியை “Palms Together” எட்டியுள்ளது. கொழும்பின் Good Market முதல் சர்வதேச சந்தைகள் வரை வடக்கும் கிழக்கும் பெண்களின் கைத்திறன் சென்றடைகிறது.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் தயாராக உள்ளார்கள். அவர்களிடம் உழைப்பும், ஆளுமைமிக்க தலைமையும், மற்றவர்களை வளர்க்கும் மனப்பாங்கும் இருக்கிறது. 

இப்போது தேவைப்படுவது காகித அளவிலான வாக்குறுதிகள் அல்ல அரசின் நேரடியான, நிறுவன ரீதியிலான (Institutional support) ஆதரவு மட்டுமே. பெண்களின் கரங்கள் இணைந்தால், நாட்டின் பொருளாதாரப் படிகள் நிச்சயம் உயரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right