(மா.உஷாநந்தினி)
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா - 2026"இன் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது தொழிலதிபர் க.ரவீந்திரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றியதை தொடர்ந்து, யோ. வைஷாலியின் கடவுள் வாழ்த்து பாடப்பட்டதோடு நிகழ்வுகள் ஆரம்பமாயின.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை உரையினை ஆற்ற, தொடக்கவுரையை தமிழ்நாட்டின் கோவிலூர் ஆதீன முதல்வர் நாராயண ஞானதேசிக சுவாமிகள் வழங்கினார்.
அதன் பின்னர், கவிப்பொழிவுக்காக 'கம்பன் காட்டும் இருள்" என்ற தலைப்பில் கவிஞர் ச.முகுந்தன் நீண்ட கவிதை வாசித்தார்.
அடுத்து கம்பன் கழகத்தால் சமூக நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பில் இயங்கி வரும் யோகர் சுவாமி மகளிர் இல்ல நெறியாள்கையாளரான கருணாகரன், பொலன்னறுவையில் அறநெறிப் பாடசாலையை நிர்வகித்து வரும் பாலன் சுதாகரன் ஆகியோருக்கான சமூக நிதி உதவிகளை கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் வழங்கினார்.
மேலும், வறுமையான சூழ்நிலையில் கல்வியைத் தொடரும் இரு மாணவிகளுக்கான கல்வி நிதியானது அவர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாக நிகழ்வு வேளையில் அறிவிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கணினித்துறையில் கல்வி பயிலும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில், வர்த்தகப் பிரிவில் முதலாம் நிலையில் சித்தியெய்திய மாணவி என இருவருக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வழக்காடு மன்றத்தில் 'சொற்குற்றங்கள் இழைத்த இராமன் குற்றவாளி" என்ற தலைப்பில் இராமனின் மூன்று சொற்குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டும் அவை மறுக்கப்பட்டும் வாதப்பிரதிவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
'உலகத்தை அழிப்பதாய் இராமன் உரைத்ததாக" ஸ்ரீ.பிரசாந்தன் வழக்கு தொடுக்க, அதனை தாமல் கோ.சரவணன் (தமிழ்நாடு) மறுத்தார். 'வீடணனை இராமன் இகழ்ந்தான்" என ந.விஜயசுந்தரம் வழக்கு தொடுக்க, தி.திருநந்தகுமார் (அவுஸ்திரேலியா)மறுத்தார். 'சீதையை இராமன் இழித்துரைத்தான்" என பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு) வழக்கு தொடுக்க, 'மரபின் மைந்தன்" முத்தையா (தமிழ்நாடு) அதை மறுத்தார்.
பேராசிரியர் எம்.இராமச்சந்திரன் (தமிழ்நாடு), மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஆகியோர் நடுவர்களாக வழக்காடு மன்றத்துக்கு தலைமை வகித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற வழக்காடு மன்றத்தின் நிறைவில், உலகத்தை அழிப்பதாக உரைத்தமை, வீடணனை இகழ்ந்தமை ஆகிய இரண்டு சொற்குற்ற வழக்குகளிலிருந்தும் இராமனை விடுவிப்பதாகக் கூறிய நடுவர் பேராசிரியர் எம்.இராமச்சந்திரன், 'சீதையை இராமன் இழித்துரைத்தமை" சொற்குற்றமே என்று தீர்ப்பளித்ததோடு மூன்றாம் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கம்பன் விழாவின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (3) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'கம்பன் புகழ்" விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM