முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார் ஜயகொடி பதவி விலகியதன் மூலம் நிலக்கரி ஊழலை மூடிமறைத்துவிடலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்புவதாகவும், ஆனால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தற்போது நிலக்கரி விநியோகிக்கும் நிறுவனத்திற்கு 25 கப்பல்களைக் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் 12 கப்பல்கள் நாட்டுக்கு வந்திருந்தன. அந்தக் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்களை அறவிட அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், அந்த அனைத்து கப்பல்களிலும் இருந்த நிலக்கரியின் தரம் 5900 kcal க்கும் குறைவாகவே காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தரம் குறைந்த 9 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்ததன் மூலம் மாத்திரம் சுமார் 8,497 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட மரிக்கார், தரமற்ற நிலக்கரியினால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் விளைவாக, அடுத்த 6 மாத காலப்பகுதியில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 40 முதல் 50 பில்லியன் ரூபாய் வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் காரணமாக நாட்டுக்கு ஒரு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னாள் அமைச்சரும், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
2009 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதி குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், குமார் ஜயகொடியின் காலத்தில் நடந்த பாரிய ஊழல்களை மறைப்பதற்காக இந்த ஆணைக்குழுவைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தார்.
விசாரணைகள் முதலில் குமார ஜயகொடியிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் இத்தகைய ஊழல்களில் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அத்துடன், அரசாங்கம் தற்போது அவசரமாக கொள்வனவு செய்துள்ள 5 கப்பல்களின் நிலக்கரி தரம் குறித்தும் தமது கட்சி மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மே தினக் கொண்டாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த மரிக்கார், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்றில் பிரம்மாண்டமான மே தினக் கூட்டத்தை நடத்தும் என்றார்.
மே முதலாம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் ஊர்வலங்களைத் தவிர்த்து, மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் போராட்டமாக இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், ஏனைய தொழிற்சங்கங்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இன்று மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளியுள்ளதாகவும் கடுமையாகச் சாடினார்.
"திருட்டுக்கு மேல் திருட்டு" என்ற கருப்பொருளில் இந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM