( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் திட்டம் தற்போது இல்லை என்று ஈரான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தெஹ்ரானில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்கா உண்மையான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடத் தயாராக இல்லை என குற்றம் சாட்டினார்.
“பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறினாலும், அதற்கான செயல்முறைகளை முன்னெடுப்பதில் அவர்கள் தீவிரம் காட்டுவதில்லை. அவர்களின் செயற்பாடுகள் இதையே தெளிவுபடுத்துகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரானிய சரக்கு கப்பலுக்கு எதிரான தாக்குதல், ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை முற்றுகை, லெபனானில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதில் தாமதம் போன்றவை அனைத்தும் ஒப்பந்த மீறல்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் தொனியில் செயற்பட்டு வருவதாகவும், அதன் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஏற்றதல்ல எனவும் கூறினார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்திக்கொண்டே, ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பான சுதந்திரப் பயணத்தை அமெரிக்கா எதிர்பார்ப்பது முரண்பாடானது என்றும் அவர் விமர்சித்தார்.
இதனால், தற்போதைய சூழலில் புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தைக்கு பெரும் தடையாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனிர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை இஸ்லாமபாத்தில் நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த டிரம்ப், முனிர் முன்வைத்த கவலைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னணியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் கடந்த காலத்திலிருந்தே பதற்றமடைந்தவையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது கூட இராணுவ மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் ஏற்காவிட்டால், அதன் முக்கிய அடிப்படை கட்டமைப்புகளை அழிக்கக்கூடும் என அண்மையில் அmமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் “அதிகபட்ச கோரிக்கைகள்” ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஈரான் மறுத்துள்ளது.
இந்த சூழலில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் உருவாகியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM