நிலக்கரி இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி அரசாங்கத் தரப்பும் எதிர்த்தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக முறைப்பாடுகளை செய்து வருகின்றன.
கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று 2009ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்த முறைமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இதேபோன்றே கடந்த 13ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று, நிலக்கரி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.
இதில், ‘ஜனாதிபதிக்கு நெருக்கமான தொழிலதிபர்களை பாதுகாப்பதற்காக நிலக்கரி கேள்விப்பத்திர நடைமுறைகளில் சட்ட விரோத தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் கசிந்துள்ள ஒளிப்பதிவுகள் மற்றும் கணக்காய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் இந்த மோசடியை விசாரிக்க வேண்டும்’ என முஜிபுர் ரஹ்மான், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டி வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரேணை கொண்டுவரப்பட்டிருந்தது. அந்தப் பிரேரணை மீதான விவாதம் கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அந்த அறிக்கையில் நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு எதிராக 153 பேரும், ஆதரவாக 49 பேரும் வாக்களித்திருந்தனர். 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை. இந்த நிலையில் 104 மேலதிக வாக்குகளினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணை மீதான விவாதத்தின் போது, நிலக்கரி இறக்குமதியில் பெரும் மோசடி இடம்பெற்றிருந்ததாக எதிரணியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அன்றைய தினம் நிலக்கரி மோசடிக்கு எதிராகவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியை பதவி விலக்க வேண்டும் என்று கோரியும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் நாட்டுக்கு பில்லியன் கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஊழலை மறைக்க அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஊழல் நிறைந்த நிலக்கரி விநியோக நடைமுறைக்கு எதிராகவும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்துக்கு எதிராகவும் நாம் போராடுகின்றோம். இந்த மோசடியினால் 32 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது. மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து இந்த நட்டத்தை மக்களின் தலையில் சுமத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
நிலக்கரி மோசடி குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றது.
இதில் நடைபெற்ற ஊழலை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, உட்பட அரசாங்க அமைச்சர்கள் நிலக்கரி இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்று உறுதி வழங்கியிருந்தனர்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி கொள்வனவு குறித்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் தற்போது சேவையில் உள்ள நீதியரசர்கள் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்திருந்தார்.
2009ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேபோன்றே, “வலுசக்தி அமைச்சர் ஊழல் செய்யும் நோக்கில் நிலக்கரி இறக்குமதி விடயத்தில் செயற்பட்டார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஊழல் நோக்கத்தில் இறக்குமதி நடந்ததது என்பதற்கான ஆதராங்களை வெளிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இங்கு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில்தான் தற்போது நிலக்கரி இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளை செய்திருக்கின்றன.
நாட்டில் நிலக்கரி இறக்குமதியின் போது மோசடி இடம்பெற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட ஆளுந்தரப்பினர் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த இறக்குமதியில் வலுசக்தி அமைச்சர் தவறிழைக்கவில்லை என்பதே ஆளுந்தரப்பினரின் நிலைப்பாடாக இருந்தது ஆனால், இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதி விடயத்தில் வலுசக்தி அமைச்சருக்கு பங்குண்டு என்றும் அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிரணி கூறி வருகின்றது.
மொத்தத்தில் நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது. தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு பல கப்பல்களில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
இந்த விடயத்தில் யார் தவறிழைத்தது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடத்தில் உள்ள நிலையில்தான் கடந்த ஒரு வருட காலத்துக்குள் இந்த இறக்குமதி இடம்பெற்றிருக்கின்றது. அது குறித்து விசாரணை நடத்துமாறு எதிரணி கோரி வருகின்றது. இதற்காகவே வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் எதிரணியினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட போது உர இறக்குமதியில் ஊழல் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியே இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சருக்கு எதிராக குற்றப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அவர் அமைச்சராக இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இந்த நிலையில் தான் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோரும் பதவி விலகியுள்ளனர் நிலக்கரி இறக்குமதி தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆணைக்குழு 2009ஆம் ஆண்டு முதல் இடம் பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது
தற்போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரிக்காது பழைய விடயங்களை கிளறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது
தேசிய மக்கள் சத்தி அரசாங்க காலத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.தற்போது நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றமையும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்ைகயில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவே அது குறித்து உடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களை விசாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM