(நெவில் அன்தனி)
கிர்கெட்டின் விவிலியம் என வர்ணிக்கப்படுவதும் ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதுமான விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை இந்திய வீரர்கள் வாரிச் சுருட்டியுள்ளனர்.
விஸ்டன் சஞ்சிகையினால் தெரிவுசெய்யப்பட்ட வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஐவரில் நால்வர் இந்தியர்களாவர். அத்துடன் கடந்த வருடத்துக்கான 9 விருதுகளில் ஏழு விருதுகள் இந்தியர்களுக்கு சொந்தமாகியுள்ளது.
விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் ஆமனக் (சஞ்சிகை) ஆசிரியர் லோரன்ஸ் பூத் என்பவரால் பாரம்பரியமாக 'வருடத்தின் அதிசிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள்' தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இங்கிலாந்தில் கடந்த வருட கோடை பருவத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில், ரவிந்த்ர ஜடேஜா, ரிஷாப் பான்ட், மொஹம்மத் சிராஜ் ஆகியோரும் நொட்டிங்ஹாம்ஷயர் அணித் தலைவர் ஹசீப் ஹமீத்தும் இந்த பெறுமதிமிக்க விருதுகளுக்கு உரித்தாகியுள்ளனர்.
அண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் ஷுப்மான் கில் 754 ஓட்டங்களை மொத்தமாகக் குவித்தார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்றில் இந்தியா சார்பாக வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்டங்கள் இதுவாகும்.
எஜ்பெஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 269 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களையும் குவித்த ஷுப்மான் கில், லீட்ஸில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட்டில் 147 ஓட்டங்களையும் மென்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் 103 ஓட்டங்களையும் பெற்றார் என பூத் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, 'நொட்டிங்ஹாம்ஷயர் அணிக்கு 15 ஆண்டுகளில் முதலாவது சம்பியன்ஷிப் பட்டத்தை ஹசீப் ஹமீத் வென்று கொடுத்தார். மேலும், 66.00 என்ற சராசரியுடன் 1,258 ஓட்டங்களை மொத்தமாக குவித்து அணியை முன்னின்று வழிநடத்தினார். அவர் இரண்டு தடவைகள் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார், மேலும் தனது நான்கு சதங்களில் இரண்டை இரட்டை சதங்களாக மாற்றினார்' என பூத் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இங்கிலாந்தில் இந்தியா மீண்டு வருவதில் ரவிந்த்ர ஜடேஜா முக்கியப் பங்காற்றியதை பூத் குறிப்பிடத் தவறவில்லை. 86.00 என்ற சராசரியுடன் 516 ஓட்டங்களை எடுத்த ரவிந்த்ர ஜடேஜா சராசரி அடிப்படையில் இந்தியர்களில் முதலிடம் பிடித்தார். மென்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சதம் குவித்து இந்தியாவை காப்பாற்றிய அவர், ஆறு தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றார்.
ரிஷாப் பான்டின் அபாரமான ஆட்டம் இந்த கோடைக்காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக ஹெடிங்லேயில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் முறையே 134 மற்றும் 118 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் மூன்று அரைச் சதங்களையும் அவர் பெற்றார். அவற்றில் கடைசி அரைச் சதம் உபாதைக்கு மத்தியில் அவரால் பெறப்பட்டதால் அது விசேடத்துவம் பெற்றது.

இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரில் மொஹகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அபார பந்துவீச்சு ஆற்றலை வெளிள்ப்படுத்தியிருந்தார். ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடரை 2-2 என சமன் செய்ய இந்தியாவுக்கு உதவினார். பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தின் காலைப்பொழுதில் இங்கிலாந்தின் கடைசி நான்கு விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
இந்த ஐவரினதும் அதிசிறந்த ஆற்றல்கள் அவர்களுக்கு வருடத்தின் அதிசிறந்த வீரர்களுக்கான விருதுகளை வென்றுகொடுத்ததாக பூத் கூறுகிறார்.
இந்த பிரதான ஐந்து விருதுகளை விட மேலும் நான்கு விருதுகளில் மூன்றை இந்திய கிரிக்கெட் வீரர்களே வென்றனர்.
ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் தலைசிறந்த வீரராக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவானார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தீப்தி ஷர்மாவும் உலகின் தலைசிறந்த ரி20 கிரிக்கெட் வீரராக அபிஷேக் ஷர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தனி ஒரு டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்திற்கான விஸ்டன் கிண்ணம் எட்ஜ்பஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்திய திறமைக்காக கில்லுக்கு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் 430 ஓட்டங்களை மொத்தமாக எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM