(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி விவகாரத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் ஜனாதிபதியை நிலக்கரியைச் சாப்பிடச் சொல்லவில்லை; முறையான ஆய்வக அறிக்கைகளைப் பின்பற்றுமாறுதான் கூறினோம். ஜனாதிபதி நிலக்கரியைச் சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் இந்த மோசடியில் யாரோ சிலர் நிலக்கரியை நன்கு சாப்பிட்டுள்ளார்கள் என்பது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
நிலக்கரி விநியோகம் மற்றும் கொள்வனவு நடைமுறையில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக நாம் நீண்டகாலமாக கூறி வந்த விடயங்கள் தற்போது தணிக்கை அறிக்கையின் மூலம் உண்மையாகியுள்ளது. 2025-2026 பருவகாலத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்ய தெரிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனம் போதிய தகுதியற்றது என்பதும் அதற்காக கேள்விப்பத்திர விதிகள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டதும் உறுதியாகியுள்ளது. பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கோரப்பட வேண்டிய கேள்விப்பத்திரங்கள் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை மூன்று மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டன. கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க வழங்கப்படும் ஆறு வார கால அவகாசம் மூன்று வாரங்களாக குறைக்கப்பட்டமை போட்டித்தன்மையை இல்லாதொழிக்கவே முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் வந்த ஜனாதிபதி நிலக்கரியை சாப்பிட்டுப் பார்த்து தரத்தை அறிய முடியாது எனக் கூறினார். நாம் ஜனாதிபதியை நிலக்கரியைச் சாப்பிடச் சொல்லவில்லை. முறையான ஆய்வக அறிக்கைகளை பின்பற்றுமாறு தான் கூறினோம். ஜனாதிபதி நிலக்கரியைச் சாப்பிடவில்லை என்றாலும் இந்த கொடுக்கல் வாங்கலில் யாரோ சிலர் நிலக்கரியை நன்கு சாப்பிட்டு ஊழல் புரிந்துள்ளார்கள் என்பது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையின் 7.1 முதல் 7.6 வரையிலான அனைத்துப் பிரிவுகளிலும் இவ்வாறான முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தணிக்கை அறிக்கையின்படி தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டினால் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 2,237 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு காலம் முடிவடைந்த ஆய்வக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளன. தரம் குறைந்த நிலக்கரியால் மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும் சாம்பல் சதவீதம் அதிகரிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
அவசரகால கொள்வனவு என்ற பெயரில் மார்ச் 17 ஆம் திகதி குறித்த நிறுவனத்திற்கு ஐந்து கப்பல்களுக்கான கேள்விப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. முன்னர் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை 100 முதல் 110 டொலர்களுக்கு வழங்க நிறுவனங்கள் முன்வந்திருந்த நிலையில் அதனைத் தாமதப்படுத்தி ஒரு மெட்ரிக் தொன் 142 டொலர் வீதம் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மெட்ரிக் தொன்னிற்கு 41 டொலர் வீதம் சுமார் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன்னிற்கு 12 மில்லியன் டொலர் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 400 கோடி ரூபாவாகும்.
இந்த ஊழலால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவையும் மக்கள் 10 பில்லியன் ரூபாவையும் நிறுவனம் 7 பில்லியன் ரூபாவையும் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி ஒரு சூத்திரத்தைக் கூறுகின்றார். இதில் அரசாங்கம் மற்றும் நிறுவனம் எனக் குறிப்பிடுவதும் மக்களின் வரிப்பணத்தையே அன்றி வேறில்லை. நாட்டு மக்கள் எவரும் இந்த மோசடிக்கு பொறுப்பல்ல. எனவே இந்த நட்டத்தை மக்கள் மீது சுமத்தாமல் இதற்கு பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட சொத்துக்களிலிருந்தே அந்தத் தொகையை அறவிட வேண்டும். ஒரு சதமேனும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவோ அல்லது மின்சாரத் துண்டிப்பிற்குச் செல்லவோ இடமளிக்க முடியாது என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM