(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 24 மணித்தியாலமும் தடையின்றி நீர் விநியோகம் வழங்கப்படும் பிரதேசங்களில் இனிவரும் காலங்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அதற்கமைய இதன் முதற்கட்டமாக பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பிரதேசங்களில் முறையே ஏப்ரல் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இரவு 8 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சாந்த பண்டார இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 24 மணித்தியால நீர் விநியோகத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போதும் சில பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது. பிலியந்தல, மஹரகம, கெஸ்பேவ, கொட்டாவ, ஹோகந்தர உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்திலேயே வழங்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் நீர் உற்பத்தி குறைக்கப்படவோ வரையறுக்கப்படவோ இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் நீர் பாவனை அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்துடனான கலந்தாலோசனையின் போது, எதிர்வரும் 2 - 3 வாரங்களுக்கு முற்றாக மழை அற்ற காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் வழங்கலில் நிச்சயம் பாதிப்புக்கள் ஏற்படும்.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தில் நீர் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். எனவே எதிர்வரும் ஓரிரு வாரங்கள் முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியாக இருக்கும். அதன் காரணமாக நீர் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும். பெரும்பாலான நீர் நிலைகளிலும், நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. வரும் வாரங்களில் மழை வீழ்ச்சி இல்லாதபட்சத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே எதிர்வரும் சில வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் சுமார் எதிர்வரும் 20 நாட்களுக்கு தேவையான நீர் மாத்திரமே காணப்படுகிறது. இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் 24 மணித்தியாலங்களும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரதேசங்களில், அதனை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் பிரதேசங்களுக்கு பிரதேசசபைகள் ஊடாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைக் கருத்திற் கொண்டு நீர் வழங்கல் சேவையுடன் தொடர்புடைய ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பகட்டமாக பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு முறையே ஏப்ரல் 2, 3 மற்றும் 4ஆம் திகதிகளில் இரவு 8 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. லபுகம மற்றும் கலட்டுவாவ நீர்த்தேக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் விநியோகங்களே இவ்வாறு மட்டுப்படுத்தப்படவுள்ளன என்றார்.
உற்பத்தி பிரதி பொது முகாமையாளர் லலித் விஜேசிங்க தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள சுமார் 300 நீர் உற்பத்தி நிலையங்களில் 2.5 மில்லியன் கன மீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதம் மேல் மாகாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. கங்கைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இந்நீர் உற்பத்திக்கான பிரதான மூலங்களாகும். மேல் மாகாணத்தில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 12.5 இலட்சம் கன மீற்றர் நீரில் கொழும்பு மாவட்டத்துக்கு 7 இலட்சம் கன மீற்றரும், கம்பஹாவுக்கு 4 இலட்சத்து 50 000 கனமீற்றரும், களுத்துறைக்கு ஒரு இலட்சத்து 80 000 கனமீற்றரும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அளவை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் கட்டண திருத்தம் வருடத்துக்கு இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே இடம்பெறும். தற்போதுள்ள கட்ட முறைமை ஜூன் 30ஆம் திகதி வரையில் நடைமுறையிலிருக்கும். அதன் பின்னரே இது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM