நாட்டில் எரிபொருள், எரிவாயு என்பவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடான நிலைமை காரணமாக பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்து வருவதுடன் நாட்டின் சேவைத்துறையும் பாதிக்கப்பட்டு வருகின்றது. பொதுப்போக்குவரத்து உட்பட பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்கி வருகின்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் தளம்பல் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு எரிபொருட்களை ஏற்றி வரவிருந்த கப்பல்கள் தாமதமடைந்துள்ளமையினால் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும் விதத்தில் கியூ.ஆர். முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தே எரிபொருளை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதுவும் குறிப்பிட்டளவான எரிபொருளே வழங்கப்படுவதனால் மக்கள் பிரயாணங்களை குறைத்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
எரிபொருளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்தால் அது போக்குவரத்துத்துறையை பாதிப்பதுடன் எரிசக்தி நெருக்கடியை நிச்சயமாக ஏற்படுத்தும். மின்சாரம் தடைப்படும் அபாயம் உருவாகும். இவற்றினால் நாடு ஸ்தம்பிதமடையும் நிலைமைக் கூட உருவாகலாம்.
2022ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பல நாட்கள் வீதிகளில் காத்திருக்கவேண்டிய நிலைமை உருவாகியிருந்தது. அன்று மின்சார விநியோகம் பல மணிநேரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது, தொழில்துறை முடக்கப்பட்டது, பாடசாலைகள், கல்விநிறுவனங்கள் இயங்கவில்லை, இதனால் நாடு ஸ்தம்பித்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், மற்றும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு காரணமாக மீண்டும் நாடு முடங்கிவிடுமோ என்று அச்சம் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
எரிபொருள், எரிவாயு நெருக்கடி நிலைமையினால் நாடு 2022 ஆம் ஆண்டு ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அவ்வாறு நாடு ஸ்தம்பிதமடைந்தமையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் பெரும் அனுபவங்களை நாட்டு மக்கள் பெற்றிருக்கின்றனர். தற்போதும் அத்தகைய அவல நிலை ஏற்படுமோ என்றே மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய எரிசக்தி நெருக்கடிகளை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து இனியாவது நாம் ஆராயவேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர தலைப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் தற்போது ஏற்பட்டதைப்போன்று மோதல் நிலைமைகள் உருவானால் எவ்வாறு எரிசக்தி நெருக்கடியை தவிர்ப்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டினை நடத்தியிருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடற்றொழில் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தவரைக்கும் மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எரிவாயுவும் அப்படித்தான் இருக்கிறது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் எரிபொருளை களஞ்சியப்படுத்த போதியளவு களஞ்சிய வசதிகள் இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாதநிலை. காணப்படுகின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய பெரியளவிலான களஞ்சியசாலைகளைக்கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது” என்று தெரிவித்திருந்தார்.
உண்மையிலேயே எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் போதிளவு களஞ்சியசாலைகள் அமைக்கப்படவேண்டியது அவசியமாகவுள்ளது. அதேபோன்றே எரிபொருள், எரிவாயு என்பவற்றை கிரமமான முறையில் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைத்திருக்கவேண்டிய அவசியமும் உள்ளது. எரிபொருளைப் பொறுத்தவரையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப ஒன்றரை மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய தொகையினை சேமித்து வைப்பதற்கே நாட்டில் வசதியுள்ளது.
இதேபோன்ற எரிவாயுவை களஞ்சியப்படுத்துவதற்கும் உரிய வசதிகள் நாட்டில் இல்லை. 800 மெற்றிக்தொன் எரிவாயுவை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளே அரசாங்கத்திடம் உள்ளது. இவ்வாறு போதியளவு களஞ்சிய வசதிகள் இல்லாமையினால் போதியளவான எரிபொருளை, அல்லது எரிவாயுவை களஞ்சியப்படுத்த முடியாத நிலைமை நீடிக்கின்றது.
தற்போது அமைச்சர் சந்திரசேகர் கடந்த கால ஆட்சியாளர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருக்கின்றார். ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு தேசிய மக்கள் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பி.யே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் ஜே.வி.பி. ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.யின்கொள்கைகள் நாட்டை பின்நோக்கித் தள்ளியுள்ளன. எரிபொருள் சேமிப்பு முறைகள் என்பது காலங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தன. முதலில் அமெரிக்க நிறுவனங்களுடனும் பின்னர் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்துடனும் இவற்றை நாம் முன்னெடுத்து வந்தோம். 2003 ஆம் ஆண்டு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க நாம் முயற்சி செய்தோம்.அன்று அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால் இலங்கைக்கு இன்று இத்தகைய பெரிய நெருக்கடி வந்திருக்காது. எரிபொருள் தாராளமாக கிடைத்திருக்கும் ஆனால்,அந்த திட்டத்தை ஜே.வி.பியே எதிர்த்தது. 2015ஆம் ஆண்டிலும் இத்திட்டம் ஜே.வி.பி.யினரால் தடுக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எண்ணெய்க் குழாய் திட்டத்தையும் ஜே.வி.பி.யினரே முடக்கினர். இந்த திட்டம் செயற்பாட்டில் இருந்திருந்தால் தற்போதைய இந்த நெருக்கடியின் போது எமக்கு உதவுவதை இந்தியாக கடமையாகக் கருதியிருக்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
உண்மையிலேயே 2001 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததையடுத்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் அவற்றை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், அந்த முயற்சிக்கு அன்றைய எதிரணியினர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்திலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போதும் 2023ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதியாக பதவிவகித்த போதும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எண்ணெய்க் குழாய் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதுவும் எதிரணியினரின் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
அதனைத்தான் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தியாவுடன் இணைந்து எரிசக்தி திட்டங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் தற்போதைய நெருக்கடி நிலைமை உருவாகியிருக்காது என்பதே ரணிலின் நிலைப்பாடாக உள்ளது.
எரிசக்தி நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாதிருக்கவேண்டுமானால் அதற்கான வழிவகைகள் குறித்து இனியாவது ஆராய்ந்து தேசிய செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எரிசக்தி கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கவேண்டும்.
தற்போதைய நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட உடன் இந்தியாவிடமே அரசாங்கம் உதவி கோருகின்றது. இவ்வாறு உதவி கோருவதைவிட இந்தியாவுடன் இணைந்து ஏற்கெனவே நடைமுறைப்படுத்த இணங்கிய எரிசக்தி திட்டங்களை முன்னெடுத்தால் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வைக் காணமுடியம்.
நாட்டில் எரிபொருள், எரிவாயு என்பவற்றை போதியளவில் சேமித்து வைக்கக்கூடிய களஞ்சியசாலைகளை அமைப்பதுடன் தொடர்ச்சியான விநியோகத்துக்கான திட்டமிடலும் அவசியமாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை இனியாவது ஆட்சியில் உள்ள அரசாங்கம் எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.
எனவே, எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி கடந்த காலங்களில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய வேண்டும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் தேசிய கொள்கைகள் மாறாத வகையில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
..















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM