இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடி, பொதுவான திட்டவரைவொன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பதில் பொதுவான இணக்கத்தை கண்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகள், அதற்குரிய திட்டவரைவு தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடுவதென்றும் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், எஸ்.ரவிகரன் ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோவின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கருணாகரம், பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் க.ச.இரத்தினவேல், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் உட்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கான அரசியல் தீர்வு, சமஷ்டி கட்டமைப்பை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் சகலரும் இணங்கியுள்ளனர். அந்த தீர்வு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி திட்டவரைவொன்றினை தயாரிப்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து போராடி வருகின்றனர். அன்று தமிழ் மிதவாதத் தலைவர்கள் அஹிம்சா வழியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அந்தப் போராட்டங்கள் தெற்கின் அரசின் தலைமைகளினால் செவிசாய்க்கப்படாததையடுத்து தமிழ் இளைஞர்கள் 1980களில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
மூன்று தசாப்த காலமாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டமானது நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் சென்றிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஜனநாயக வழியிலான போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எட்டு தசாப்தங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு என்ற விடயமானது இன்னமும் கானல் நீராகவே இருந்து வருகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்களை நடத்திய போதிலும் அவற்றினால் எத்தகைய பயனும் ஏற்படவில்லை.
பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட்டு, அரசியல் தீர்வுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை எவையுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தியானது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
ஆனால், அரசாங்கம் ஆட்சியமைத்து ஒன்றரை வருடம் பூர்த்தியடைந்துள்ள போதிலும் இன்னமும் அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்பு குறித்தோ உரிய கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. வெறும் வாக்குறுதிகளை வழங்கியுள்ள அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை செலுத்துமாறு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் வலியுறுத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை ஒரு பக்கம் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் பொதுவான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் ஓர் தீர்க்கமான நிலைப்பாட்டுக்கு வர வேண்டியது இன்றியமையாததாகவுள்ளது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் ஒன்றுகூடி, ஒற்றுமையாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இதுதான் என்று வலியுறுத்தும் வகையில் திட்டவரைவொன்றை தயாரிக்க வேண்டியது இன்றியமையாததாகவுள்ளது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் அக்கறை கொண்டுள்ள போதிலும் அதனை ஒன்றிணைந்து தயாரிக்கும் விடயத்தில் இழுபறி நிலைமை காணப்பட்டே வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். ஆனால், இந்த முயற்சி வெற்றியளித்திருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும் பொதுவான ஆவணமொன்றை தயாரிப்பதற்கு இணக்கம் கண்டிருந்தனர். இது குறித்து சில கலந்துரையாடல்களும் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்றிருந்தன. ஏனைய கட்சிகளையும் இந்த முயற்சியில் ஒன்றிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், ஏனைய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி வெற்றியளித்திருக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றினை ஏற்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சியை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கோரிக்கை விடுத்திருந்ததாகவே தெரிகின்றது. இந்தப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால், அரசியல் தீர்வு தொடர்பில் கட்சிகளின் மற்றும் சிவில் சமூகத் தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த மாதம் 15ஆம் திகதி ஏற்பாடு செய்ததையடுத்து சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த சந்திப்பை இரத்துச் செய்யுமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கோரியதற்கு இணங்க அந்தச் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.
இதனையடுத்துதான் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது மீண்டுமொரு முயற்சியை ஆரம்பித்திருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றமையும் சமஷ்டி தீர்வை வலியுறுத்தும் வகையில் திட்ட வரைவொன்றை தயாரிக்க இணங்கியமையும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளேயாகும்.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது சுமத்தப்படுகின்றது. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி உட்பட வேறு சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமை தவறு என்ற தொனியில் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் தீர்வுக்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதே சிறந்ததாகும்.
தற்போதைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே இணங்கியிருந்தன. ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே இந்த விடயத்தில் தனி வழிப் போக்கை கொண்டிருந்தது.
எனவே, இந்த இரு தரப்புக்கும் இடையில் முதலில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளும் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் தீர்வு தொடர்பான பொதுவான திட்டவரைவு தயாரிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM