(நெவில் அன்தனி)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்று குழு 1க்கான கடைசிப் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் இந்தியா கடைசி அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சகல அத்தியாயங்களிலும் குறைந்தது ஒரு ஆசிய அணியாவது அரை இறுதியில் விளையாடுவது உறுதி செய்ய்பபட்டது.
மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்ட 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஆரம்பம் முதல் கடைசிவரை அற்புதமாக துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்த சஞ்ச செம்சன் இந்தியாவின் மிகவும் அவசியமான வெற்றியில் பிரதான பங்காற்றினார்.
அபிஷேக் ஷர்மா (10), இஷான் கிஷான் (10), அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (18) ஆகிய மூவரும் 20 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.
எனினும், பொறுமையுடனும் சிறந்த திட்டமிடலுடனும் துடுப்பெடுத்தாடிய சஞ்சு செம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதிசெய்தார்.
சூரியகுமார் யாதவ்வுடன் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த சஞ்சு செம்சன், 4ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
திலக் வர்மா 27 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷிவம் டுபே 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷமர் ஜோசப் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்பம் முதல் கடைசி வரை நிதானம் பிசகாமல் அதேவேளை தேவையான நேரத்தில் எல்லாம் பவுண்டறிகளை விளாசி அடித்த துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு உரம் சேர்த்தனர்.
ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (14) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு குறைவாக எடுத்தார். ஓட்ட வேகத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் விக்கெட்டை இழந்தார்.
அணித் தலைவர் ஷாய் ஹோப் (32), ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 53 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக் கொடுத்தனர்.
தொடர்ந்து ரொஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து இருவரும் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர் (103 - 3 விக்.)
ஷிம்ரன் ஹெட்மயர் 12 பந்துகளில் 27 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (103 - 3 விக்.)
15ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 119 ஓட்டங்களாக இருந்தபோது ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 4ஆவதாக களம் விட்டகன்றார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 195 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ரொவ்மன் பவல் 19 பந்துகளில் 34 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: சஞ்சு செம்சன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM