தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அண்ணன் அமிர்தலிங்கத்தின் பயணமே இன்றுவரை தொடர்கின்றது. அத்தகைய அவரின் பயணத்திற்கு முடிவு காணப்படவேண்டுமாயின் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. தற்போதுள்ள இந்நிலைமை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் இந்நாடு தற்போதுள்ள நிலையில் இருந்தும் பொருளாதார கஷ்டங்களிலிருந்து மீட்கப்பட வேண்டுமாயின் இங்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமிர்தலிங்கத்தின் 90 வது பிறந்ததினம் தொடர்பான நினைவுப் பேருரை நேற்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் நாங்கள் போட்டியிடவில்லை. 1988 ஆம் ஆண்டு நாங்கள் பகிரங்கமாக ஒரு வி்டயத்தை கூறினோம். 13 வது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு முன்னேற்றகரமானது. அதில் மாகாணசபைகள் உருவாக்கப்படுகின்றன. முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அதிகாரப் பகிர்வு என்பன காணப்படுகின்றன. அந்த வகையில் அது முன்னேற்றகரமானது ஆனாலும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியாத காரணத்தினால் தமிழர் விடுதலைக்கூட்டணி அதனை நிராகரித்தது.
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு அமிர்தலிங்கம் அண்ணன் உடைய உதவியுடன் பின்னர் அவரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எமது பாதை மிகவும் கடினமான பாதையாக இருந்துள்ளது. எமது பிரச்சினையை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னராக தீர்த்திருக்கவேண்டும். ஆனால் நாங்கள் உறுதியாக இருந்த காரணத்தினால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு அரசியல் கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டதன் காரணத்தினாலும் அப்பாதையில் எமது மக்களும் ஒற்றுமையாக இருந்து பயனித்ததன் காரணமாகவும் இவ்வளவு தூரம் எமது இலக்கை நோக்கி நியாயமான ஒரு பயணத்தை நாம் செய்துள்ளோம்.
அண்ணன் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்திருந்தாலும் அவர் ஆரம்பித்த அந்தப்பாதை அந்தப் பயணம் இன்று வரை தொடர்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் அரசியலமைப்பு திருத்தம் ஒரு சட்டமாக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அதில் பொதுப்பட்டியல் இருக்கவில்லை. இவற்றைவிட பல விடயங்கள் சம்பந்தமாக அது மிகவும் தூரம் செல்வதாக காணப்பட்டது.
ரணில் விக்கிரசிங்கவின் காலத்தில் ஒஸ்லோவில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி முறை குறித்து ஆராயப்பட வேண்டும் என்பதுவே ஒஸ்லோவில் வெ ளியிடப்பட்ட அறிக்கையின் சாராம்சம் என்பதுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜஷசவின் காலத்தில் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வரவேண்டும் மக்களினுடைய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் மக்களினுடைய அடையாளங்களும் உறுதிசெய்யப்பட வேண்டும். அயல் நாடான இந்தியாவின் அரசியல் யாப்பை கற்கவேண்டும் போன்ற விடயங்களை வலியுறித்தி நிபுணர் குழு மற்றும் சர்வகட்சிக் குழு தங்களது வரைபுகளை சமர்ப்பித்திருந்தன.
இவை அனைத்தும் அமர்த்தலிங்கத்தின் காலத்திற்குப் பின்னர் நடைபெற்றவை. ஆனால் இவ்வளவு தூரம் நாங்கள் பயணித்ததன் காரணத்தினாலும் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழர் விடுதலைக்கூட்டணி 1988 ஆம் ஆண்டு அதனை நிராகரித்து அது ஒரு முடிவான தீர்வாக அமையாது எனக் கூறியதன் காரணத்தினாலுமே இக் கருமங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இன்றைக்கும் நாங்கள் இக் கருமத்தில் ஈடுபட்டுவருகின்றோம். எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் மக்களினுடைய உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்து பிரதேசங்களில் எமக்கு போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறித்திவருகின்றோம்.
மேலும் இலங்கையில் ஏற்படுத்தப்படும் அரசியல் தீர்மானங்கள் இராணுவத்தினருடைய கை ஓங்குவதனால் ஏற்படக்கூடாது என்றும் அது அரசியல் ரீதியாகவே ஏற்படவேண்டும் என்பதையே நாம் இந்தியாவிற்கு தெளிவாக கூறிவருகின்றோம். அத்துடன் இக்கருத்தையே அமிர்தலிங்கமும் தெ ளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் நாங்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவிச் செயலாளரை சந்தித்திருந்தபோது இந்தக் கருமங்களை அவர்களுக்கு தெளிவாக விளக்கிக்கூறியிருந்தோம். எமக்கு எந்தவிதமான தீர்வு வேண்டும் என்பதை அவரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்று சர்வதேச சமூகம் எங்களுடைய நிதானமான நியாயமான போக்கின் அடிப்படையில் மிகவும் கூடுதலான ஆதரவினை வழங்கக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ச்சியாக ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும் நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு எப்போதும் தயாராக இருந்துள்ளோம். நாம் வைத்திருக்கின்ற நிலைப்பாடு நியாயமானது நாங்கள் அநீதியாக எதனையும் கேட்கவில்லை. நியாயமற்ற முறையிலும் எதனையும் கேட்கவில்லை. அதுவே எமது பலமாகும். தற்போது சர்வதேச ஆதரவு பெரிதளவில் நமக்கு உள்ளது. அது அதிகரித்துக்கொண்டும் வருகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக எமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கைக்குப் பின்னால் ஒற்றுமையாக இருந்துள்ளார்கள். அதனை நாம் மதிக்கின்றோம் ஏனேனில் அது மிகவும் பெறுமதியான ஒரு விடயம். அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்தகைய ஒற்றுமையை நாம் குலைத்துவிடக்கூடாது. நாங்கள் நியாயமான கோரிக்கையின் பின்னாலேயே ஒருமித்து நிற்கின்றோம். இது தெளிவாக வேண்டும்.
நாங்கள் வாழ்வதும் மறைவதும் சகஜமான ஒரு விடயம். அண்ணன் அமிர்தலிங்கம் சிறந்த ஒரு சட்டத்தரணி. ஆனால் அவர் தனது தொழிலையோ தனது குடும்பத்தையோ சரிவர கவனிக்கவில்லை. மாறாக அவர் தன்னை முழுமையாகவே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்திருந்தார். அவர் இறக்கும் வரையில் இடம்பெற்ற சலக கருமங்களிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார். அவர் மறைந்த பின்னரும் அவரது பயணமே இற்றைவரை தொடர்கின்றது. அவர் தொடக்கிவைத்த அவரின் பயணத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான நிதானமான ஒழுக்கமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதனைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகமும் அதன் பங்களிப்பைச் செய்யவேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. அவர்களும் உணர்கின்றார்கள் இந்நிலமை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இந்நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்படவேண்டுமாயின் பொருளாதார கஷ்டங்களிலிருந்து நீக்கப்படவேண்டுமாயினும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அந்த வகையில் இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM