பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது: 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை!

25 Feb, 2026 | 03:31 PM
image

அரச புலனாய்வுப் பிரிவு  முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  இன்று புதன்கிழமை (25)  காலை பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன:

மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், 

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்தார்.

கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி'  தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில், 

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்தால் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். அதன்பின்னர் தேவைப்படின், சாட்சியங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக காலம் தடுத்து வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு" என்றார்.

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் இதன்போது உறுதியளித்தனர்.

 'சனல்-4' விவகாரம் மற்றும் அசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் பின்னணி

2019 ஏப்ரல் 21 அன்று சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த 10 தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு தினசரி விசாரணை நடைபெற்று வருகின்றது.

இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதாக நீண்டகாலமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது. 

குறிப்பாக, பிரித்தானியாவின் 'சனல்-4' ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில், சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்தும், ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ளவருமான அசாத் மௌலானா வழங்கிய தகவல்களே சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளில் திருப்புமுனையாக அமைந்தன.

கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த இரகசிய விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலும், புதிதாகக் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலுமே இன்றையதினம்  இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது சி.ஐ.டி வசம் உள்ள சுரேஷ் சலேவிடம் தாக்குதலின் பின்னாலுள்ள அரசியல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:24:09
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31