இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) அதிகாரபூர்வமாக “இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்” (SLTPL) உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சி, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் நீண்டகால அபிவிருத்திக்கும், நிலைத்தன்மை வாய்ந்த எதிர்காலத்துக்கும் அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 முதல் 25 வரை தொடக்க லீக்
SLTPL தொடக்க நிகழ்வு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில், தொழில்முறை நிர்வாகத்துடன் ஃபிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டியாக இது நடத்தப்படும்.
இந்த லீக்கில் நாட்டின் முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய அணிகளே பங்குபற்றுகின்றன.
ஒவ்வொரு அணியிலும் பல்வேறு திறமையான மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இடம்பெறுவர். இதன் மூலம் போட்டித்தன்மை அதிகரிக்கப்படுவதோடு, புதிய அனுபவங்களையும் கற்றல் வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக SLTAஇன் தலைவர் Iqbal Bin Issackதெரிவித்ததாவது:
“இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் உருவாக்கப்பட்டமையானது டென்னிஸ் விளையாட்டுக்கான மாற்றத்தை கொண்டுவரும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
இது நிலைத்தன்மை வாய்ந்த, எதிர்கால நோக்கமுடைய மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. வர்த்தக ரீதியான வெற்றிகள் அனைத்தும் மீண்டும் விளையாட்டின் மேம்பாட்டுக்கே முதலீடு செய்யப்படும். டென்னிஸின் தரநிலைகளை உயர்த்தவும், அணுகலை விரிவுபடுத்தவும் இது உதவும்” எனக் கூறினார்.

100% இலாப நோக்கமற்ற முயற்சி
SLTPLஆனது 100% இலாப நோக்கமற்ற முயற்சியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீக்கின் மூலம் கிடைக்கும் அனைத்து இலாபங்களும் நேரடியாக டென்னிஸ் விளையாட்டுக்கே மீளமுதலீடு செய்யப்படும்.
இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு, வீரர்களுக்கான முன்னேற்ற பாதைகள், பிராந்திய அளவிலான அணுகல், நாடு முழுவதும் பங்கேற்பு விரிவாக்கம் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக SLTA துணைத்தலைவரும் போட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளுக்கான தலைவருமான Rukmal Cooray தெரிவித்ததாவது:
“SLTPL இலங்கையின் போட்டித் தரநிலைகளை உயர்த்துவதோடு, எதிர்காலத்தில் சர்வதேச பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் நீண்டகால வளர்ச்சி தளமாக தந்திரோபாயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, இலங்கையில் டென்னிஸுக்கான வலுவான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியமான முதல் படியாகும்.”

நிலையான வருவாய் மாதிரி
லீக்கின் வர்த்தக கட்டமைப்பு தற்காலிக அனுசரணைகளில் மட்டும் சார்ந்திருக்காது. அதன் மாற்றாக Franchise உரிமையாளர் கட்டணங்கள், பல ஆண்டுகால அனுசரணை ஒப்பந்தங்கள், ஊடக உரிமைகள், விருந்தோம்பல் சேவைகள் மூலம் நிலையான வருவாய் ஈட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி Roshan Silva தெரிவித்ததாவது:
“இலங்கையில் ஒரு தொழில்முறை ஃபிராஞ்சைஸ் அடிப்படையிலான டென்னிஸ் லீக்கை உருவாக்கி, அதனை செயற்படுத்துவதே எமது நோக்கம். வலுவான நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்புடன் இது செயல்படும்” எனக் கூறினார்.
நீண்டகால வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த முயற்சி
SLTA அங்கீகாரத்துடன், கட்டமைக்கப்பட்ட நிர்வாக மற்றும் வர்த்தக மாதிரியின் கீழ் SLTPL நிறுவப்படுகிறது. விளையாட்டு, சட்டம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ துறைகளில் அனுபவமுள்ள நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், தனித்துவமான நிறுவன அமைப்பின் மூலம் இயங்கவுள்ளது.
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச தரநிலைகளுடன் இணங்க வடிவமைக்கப்பட்ட இந்த லீக், இலங்கையில் டென்னிஸை தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயர்த்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
2026 ஏப்ரலில் தொடக்கப் போட்டி நடைபெற உள்ள நிலையில், SLTPL இலங்கை டென்னிஸில் புதிய முதலீடுகளை ஈர்த்து, நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான விரிவுபடுத்தக்கூடிய மாதிரியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிராஞ்சைஸ்கள், வீரர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM