தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகள் செயற்பட வேண்டியதன் அவசியம் தற்போது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
கொடூர யுத்தத்தினால் பெரும் பாதிப்புகளை சந்தித்த தமிழ் மக்கள் இன்றும் தமது அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வின்றி அவலமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை என்ற விடயம் மிகவும் கவலைக்குரியதாகவே அமைந்திருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று தற்போது ஆட்சில் உள்ள தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த தமிழினம், பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்தித்த தமிழினம், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்ற போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த 16 வருடங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.
இதேபோன்றுதான் யுத்தத்துக்கு அடிப்படைக் காரணமான இனப்பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதை தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டு தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வினைப் பெறுவதற்கு உந்துசக்தியுடன் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பே தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.
ஆனால், தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகள் சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி வழங்கியிருந்தது.
ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான செயற்பாட்டை முன்னெடுப்பது குறித்தோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்த தீர்மானத்துக்கு வந்து அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான திட்டவரைபொன்றை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டியதன் அவசியம் சுட்டக்காட்டப்பட்டு வருகின்றது.
ஆனால், அதற்காக ஒன்றுபடவோ அல்லது ஒன்றிணைந்து திட்டவரைபொன்றை தயாரிப்பதற்கோ தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாராக இல்லை. சுயநல அரசியலை நோக்காகக் கொண்டு இந்த விவகாரத்தில் எதிரும் புதிருமான நிலைப்பாட்டை எடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் செயற்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பொது இனக்கப்பாடொன்றை எட்டப்பட வேண்டும் என்ற அவசியம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த விவகாரத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட தயார் என்று அந்தக் கட்சி அறிவித்திருந்தத. ஆனால், அந்த முயற்சி பயனளித்திருக்கவில்லை.
இதனையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு தயார் என்று அறிவித்திருந்தது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் இந்த விடயம் தொடர்பில் சில கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி பொது ஆவனமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சம்மதித்திருக்கவில்லை. இதேபோல் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் இணக்கப்பாடொன்றுக்கு வந்திருக்கவில்லை.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தரப்புகளையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டுச் சந்திப்பை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் உடன்பட்டதையடுத்து இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பிலும் யார், யார் பங்கேற்பது என்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் ஏற்பட்ட ஏட்டிக்குப் போட்டியான நிலைமை காரணமாக இந்தச் சந்திப்பும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
தூதரகத்தின் ஏற்பாட்டில் கூட்டுச் சந்திப்புக்கு இணங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், எதிர்வரும் 15ஆம் திகதி அரசியல் தீர்வு குறித்து தமிழ் தேசிய தரப்பினரை உள்ளடக்கி கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இத்தகைய ஏற்பாடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.சுமந்திரன் அதிருப்தி கொண்டிருந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கூட்டத்தை இரத்து செய்யுமாறு கோரியிருக்கின்றார். இதனையடுத்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.
19ஆம் திகதி தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த கூட்டத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பு தொடர்பிலான கூட்டமொன்றை ஏன் ஏற்பாடு செய்தார் என்ற விடயம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், தூதரகத்தின் ஏற்பாட்டுக்கு முன்னரே தான் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான முன் முயற்சிகளை ஆரம்பித்து விட்டதாக கஜேந்திரகுமார் விளக்கம் கூறியுள்ளார்.
‘தூதரகத்தின் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் பொதுக் கூட்டத்தை நடத்த முற்பட்டார்? அதில் உள்நோக்கம் இருக்கின்றது’ என்பதே சுமந்திரனின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. இவ்வாறு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் மூலம் பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளின் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டினால் இல்லாது போயுள்ளது.
வெறுமனே சுயநல அரசியலை கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுமானால் தமிழ் மக்கள் மாற்றுத் தலைமைகளை தெரிவு செய்யும் நிலைமை நிச்சயமாக ஏற்படும். கடந்த பொதுத் தேர்தலில் சிறந்த அனுபவத்தை பெற்ற பின்னரும் கூட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் தான்தோன்றித்தனமாக செயற்பட முனைவதானது எந்த வகையிலும் தமிழ்த் தேசியத்தை கட்டிக்காப்பதற்கு உதவப் போவதில்லை.
எனவே, தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படவில்லையானால் பாரதூரமான முடிவினை சந்திக்க வேண்டி வரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM