இலங்கையின் எதிர்கால பொருளாதார மாற்றத்துக்கான மையமாக போர்ட் சிட்டி கொழும்பு விளங்குவதாக வலியுறுத்தும் தெளிவான செய்தி, சிங்கப்பூரில் ஷாங்கிரிலா ஹோட்டலில் கடந்த ஜனவரி 27 அன்று நடைபெற்ற “போர்ட் சிட்டி கொழும்பு பிரத்யேக முதலீட்டாளர் மன்றம்” (Exclusive Port City Colombo Investor Forum) ஊடாக உலக முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த உயர்மட்ட முதலீட்டாளர் மன்றம், சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் நிலச்சொத்து, நிதி சேவைகள், முதலீட்டு மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 மூத்த முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வைத் தொடங்கி உரையாற்றிய சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க,
இலங்கை–சிங்கப்பூர் மற்றும் பிராந்திய நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலக தரநிலைகளுடன் ஒத்திசைவாக செயல்படும் இலங்கையின் தயார்பாட்டின் அடையாளமாக போர்ட் சிட்டி கொழும்பு விளங்குவதாகவும் அவர் கூறினார்.
முதன்மை உரையை நிகழ்த்திய வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்பு தூதுவரும் மேல் மாகாண ஆளுநருமான ஹனிப் யூசூப்,
இலங்கை இன்று ஒரு மீட்புக் கதையல்ல; அது ஒரு மாற்றத்தின் கதை” எனத் தெரிவித்தார். கடந்த காலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புகள் வலுப்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மீட்பு, சர்வதேச நிதி நிறுவனங்களால் உலகின் வேகமான மீட்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீண்டகால சீர்திருத்தங்கள், நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றில் இலங்கை உறுதியுடன் இருப்பதாகக் கூறிய சிறப்பு தூதுவர், சுயாதீன மத்திய வங்கி, நிதி மற்றும் கடன் மேலாண்மைச் சட்டங்கள், வெளிப்படையான விதிமுறைகளைக் கொண்ட பொருளாதார கட்டமைப்பு ஆகியவை முதலீட்டாளர்களுக்கான நம்பகத்தன்மையை உயர்த்துவதாக விளக்கினார்.
மேலும், பொதுச் சட்ட மரபு (Common Law), இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கைகள், சர்வதேச நடுவர் தீர்ப்புகளுக்கான அங்கீகாரம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன எனத் தெரிவித்தார்.
கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஹர்ஷ அமரசேகர (PC),
2021 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவின் நிர்வாக கட்டமைப்பை விளக்கினார். போர்ட் சிட்டி, இலங்கையின் முதல் பல்துறை சேவை அடிப்படையிலான சிறப்பு பொருளாதார மண்டலமாக (Multi-Services SEZ) செயல்படுவதாகவும், ஒரே சாளர சேவை, முதலீட்டுப் பாதுகாப்பு, கணிக்கக்கூடிய ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் வலுவான சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் வணிக உலகின் பிரதிநிதிகளான GFTN Capital நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் CEO நீல் பாரேக் மற்றும் REDAS நிறுவனத்தின் CEO அந்தோனி சுவா, போர்ட் சிட்டி கொழும்பு பிராந்திய மற்றும் உலக முதலீட்டாளர்களுக்கான முக்கிய வாயிலாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கெப்பல் (Keppel) போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குபற்றலும், நிலைத்த நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
CPCEC பணிப்பாளர் நாயகம் ரேவன் விக்கிரமசூரிய,
நீண்டகால வரி ஊக்குவிப்புகள், வெளிநாட்டு நாணயச் சட்டத்தின் கீழான தளர்வுகள், 16 வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை, முதலீட்டாளர்களுக்கான “Green Channel” விசா வசதிகள் உள்ளிட்ட முதலீட்டு செயல்முறைகளை விளக்கினார்.
நிகழ்வின் இறுதியில் CHEC போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் பாய் சியாபிங்,
போர்ட் சிட்டி கொழும்பு, பிராந்திய தலைமையகங்கள், உலகளாவிய திறமைமிக்க பணியாளர்கள், தென் ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பொருளாதாரத்துடன் இணையும் முழுமையான வணிக சூழலாக உருவெடுப்பதாக தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM