நாட்டில் மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெறுமென்பது தொடர்பான விடயங்கள் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தற்போது பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதாவது தற்போதைய சூழலில் மாகாண சபை தேர்தல் நடக்குமா இல்லையா என்பது ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரசாங்கம் எந்த காரணத்தை கொண்டும் மாகாண சபை தேர்தலை நடத்தாது என்றும் அதற்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது என்ற தொனியிலும் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டன.
அதேபோன்று ஆளுங்கட்சியை பொறுத்தவரையில் மாகாண சபை தேர்தல் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நடக்கும், நாங்கள் தேர்தலுக்கு அச்சப்படவில்லை, தேர்தல் முறை தொடர்பான குழப்பமே தேர்தல் தாமதத்துக்கு காரணம், எனவே தற்போது பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விடயங்கள் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்து வருகிறது.
ஆனால் பொதுவாக அரசியலில் அக்கறை கொண்டிருப்போர் வெளியிடுகின்ற கருத்துக்களை பார்க்கும்போது மாகாண சபை தேர்தல் நடக்குமா என்ற ஒரு கேள்வி எழுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. அதாவது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி-.யை பிரதானமாக கொண்டது. இந்த கட்சியின் 2024-ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கட்சியின் கடந்தகால நிலைப்பாடுகளை எடுத்து நோக்கும் போது மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா என்பது தொடர்பான சந்தேகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம் கடந்த 50 ஆண்டு அரசியல் வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணியானது மாகாண சபை முறைமையை எதிர்த்தே வந்திருக்கிறது. எனினும் கடந்த 10 வருடகாலங்களில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர்களது நிலைப்பாட்டில் ஒரு சிறிய தளர்வை காண முடிந்தது. அதாவது ஆரம்ப காலத்தை போன்று மிகப்பெரிய அளவில் எதிர்க்கும் நிலைப்பாடு கடந்த 10 வருடங்களில் மக்கள் விடுதலை முன்னணியிடம் காணப்படவில்லை. ஆனாலும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் மாகாண சபை முறைமையை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்தே அரசியல் செய்து வந்திருக்கின்றது.
அப்படி கடந்த 50 வருட காலமாக இந்த மாகாண சபை முறைமையை எதிர்த்த ஒரு அரசியல் கட்சி தற்போது அதிகாரத்தில் இருக்கிறது. எனவே அந்தக் கட்சி மாகாண சபை தேர்தலை நடத்துமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அது தற்போது மாகாண சபை தேர்தல் தாமதப்படுத்தப்படும் போது மேலும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக பரிணாமம் பெறுகிறது.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பொறுத்தவரையில் மாகாண சபை முறைமையை அவர் ஒருபோதும் எதிர்த்து பேசியதில்லை. அவர் அது அவசியமற்றதோ அல்லது அது நீக்கப்படும் என்றோ பேசியதாக அண்மைக்கால வரலாற்றுப் பதிவுகள் இல்லை. அதுமட்டுமன்றி அவர் மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்ந்து கொண்டு செல்லப்படும், தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற வகையான கருத்துக்களையே கடந்த காலங்களில் தெரிவித்து வந்திருக்கிறார். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்ற ஒரு நம்பிக்கையும் காணப்படுகிறது.
ஆனாலும் தற்போது இந்த தாமதங்களை பார்க்கும் போது எங்கே தேர்தல் நடத்தப்படுமா என்ற ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
மாகாண சபை தொடர்பில் அரசாங்கம் கடந்த காலங்களில் எவ்வாறான நிலைப்பாட்டையும் கொண்டிருந்திருக்கலாம், அரசியல் ரீதியாக இந்த நிலைப்பாடு இருந்திருக்கலாம். எனினும் தற்போது மாகாண சபை முறைமை என்பது ஏன் கொண்டு வரப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அரசியல் ரீதியாக எவ்வாறான நிலைப்பாடுகள் அரசாங்கத்துக்கு இருந்தாலும் மாகாண சபை முறைமையானது இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்ப்பதற்காக, அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட ஒரு முறைமையாகும் என்பதை மறக்கக் கூடாது. அந்த முறைமையினால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் கடந்த காலங்களில் அல்லது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது யதார்த்தம் தான்.
ஆனால் அதற்காக அந்த முறைமையை இழந்து விடுவதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாராக இல்லை. அதனை தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பமாக எடுத்துக் கொள்ள முடியும் என சகலரும் கூறுகின்றனர்.
கடந்த கால அனுபவங்களின்படி மாகாண சபை முறை ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர்களினால் முழுமையாக, சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.
எப்படியிருப்பினும் மாகாண சபை தேர்தல் எந்த அடிப்படையிலாவது நடத்தப்பட வேண்டும். தற்போது மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான ஒரு குழப்பமே தேர்தல் தாமதிக்கப்படுவதற்கு காரணம் என்று அரசாங்க தரப்பில் தாமதத்திற்கான காரணம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் மிகவும் எளிதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கின்ற தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் அடுத்த மாதமே மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த முடியும்.
ஆனாலும் தற்போது அரசாங்கம் எந்த முறையில் இந்த தேர்தலை நடத்துவது என்பது தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு பாராளுமன்ற விசேட குழுவை நியமித்திருக்கிறது. அந்த குழுவுக்கு இன்னும் உறுப்பினர்கள் பெயரிடப்படவில்லை.
2017-ஆம் ஆண்டு இந்த மாகாண சபை தேர்தல் முறை முழுமையாக விகிதாசார முறையிலிருந்து கலப்பு முறைக்கு மாற்றப்பட்டது. 50 வீத விகிதாசார முறை, 50 வீத தொகுதி முறை என்ற ரீதியில் இந்த தேர்தல் முறை மாற்றப்பட்டது.
எனினும் அதற்கேற்ப உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அப்போது பாராளுமன்றத்தினால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதால் தான் இந்த தேர்தல் முறை தொடர்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. எந்த முறையில் தேர்தல் நடத்துவது என்பது தொடர்பான குழப்பம் ஏற்பட்டது. தற்போதைய புதிய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதாயின் மீண்டும் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அதற்கு மிக அதிக காலம் எடுக்கும்.
இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் ஜனநாயக சமூகத்தில் மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமை என்பது இலங்கை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற, உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஒரு அடிப்படை அம்சமாகும்.
எனவே அதற்கு ஏற்ற முறையில் உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை, இறையாண்மை உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை யாரும் தாமதப்படுத்தவோ அல்லது அதனை வலுவிழக்கச் செய்யவோ முடியாது.
அரசாங்கம் இந்த விடயத்தில் விரைவாக தீர்மானம் எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி விரைந்து ஏதோ ஒரு முறையில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவோம் நடத்துவோம் என்று கூறி காலத்தை இழுத்தடிக்காமல் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இலங்கை மக்கள் மட்டுமல்ல, அந்த முறைமையை கொண்டு வருவதற்கு உதவி வழங்கிய இந்தியா மற்றும் சர்வதேச சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இலங்கை எப்படி இந்த ஜனநாயக உரிமையை பிரயோகிக்கிறது என்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் இதனையும் கருத்திற்கொண்டு உறுதியான தீர்மானத்தை விரைவில் சகல தரப்பினரும் இணைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM